படம்: ருத்ரதாண்டவம்
நடிப்பு: ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கவுதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், மாளவிகா அவினாஷ், தீபா. தம்பி ராமையா, கோபி,ராம்ஸ்,மனோ பாலா, காக்கமுட்டை விக்கி, இளங்கோ, லிங்கேஷ் கார்த்தி.
தயாரிப்பு:ஜி எம் பிலிம், கார்ப்ரேஷன், 7 ஜி பிலிம்ஸ்
இசை: ஜூபின்
ஒளிப்பதிவு:பரூக் ஜே பாஷா
இயக்கம்:மோகன்.ஜி.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ருத்ரபிரபா கரன் (ரிச்சர்டு) இடமாற்றலாகி ராயபுரம் பகுதி போலீஸ் நிலையத்துக்கு வருகிறார். அப்பகுதியில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உயர் அதிகாரி ஆணையிடுகிறார். அதன் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும் அவர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ரூ 200 கோடி மதிப்பிலான போதை பொருளை கைப்பற்றுகிறார். அதனை கடத்திய வாதாபிராஜன் (கவுதம்மேனன்)ருத்ரனிடம் பேரம் பேசுகிறார். அவரும் அதற்கு உடன்படுவதுபோல் செயல்பட்டு மொத்த போதை பொருளையும் தீயிட்டு அழிக்கிறார். இதனால் கோபம் அடையும் வாதாபி பழிவாங்க தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். கஞ்சா விற்கும் இரண்டு இளைஞர்களை பிடிக்க செல்லும் ருத்ரன் மோட்டார் சைக்கிளில் தப்பிக்கும்அவர்களை காலில் எட்டி மிதித்து தள்ளி பிடிக் கிறார். இதில் மாறன் என்ற இளைஞனுக்கு தலையில் அடிபடு கிறது. அவனை ருத்ரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். ஒரு கட்டத்தில் மாறன் இறந்துவிடுகிறான். அதையறிந்த வாதாபி இதுதான் ருத்ரனை பழிவாங்க கிடைத்த சந்தர்ப்பம் என்று எண்ணி அவரை ஜாதி ரீதியாக சிக்கலில் மாட்டிவிடுகிறார். ஜாதி வன்மத்தை மனதில் வைத்துத்தான் மாறனை ருத்ரன் கொன்றதாக ருத்ரன் மீது புகார் தரப்படு கிறது. அதன்பேரில் ருத்ரன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தனது செயலில் ஜாதி வன்மம் எதுவும் இல்லை, தன்னால் மாறன் இறக்க வில்லை என்று வாதம் செய்கிறார் ருத்ரன். அவருக்காக பட்டியலின வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுகிறார். ஜாதி வன்கொடுமை சட்டத்தில் சிக்க வைக்கப்பட்ட ருத்ரன் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை சட்ட ரீதியாக அலசி விளக்குகிறது படம்.
ஜாதி ரீதியாக சர்ச்சையாக பேசப்பட்ட திரவுபதி படத்தை இயக்கிய மோகன்.ஜி.தற்போது மத ரீதியிலான ஒரு கதை அம்சத்தை சட்டத்தின் அடிப்படையில் ருத்ரதாண்டவம் என்ற பெயரில் தந்திருக்கிறார். இது சர்ச்சை ஏற்படுத்துமா, இல்லையா? என்பது வேறு விஷயமென்றாலும் பொதுப் படையான சில சட்ட நுணுக்கங்களை கதை ஆராய்ந்திருக்கிறது.
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பட்டியலின ஜாதியை சேர்ந்த ஒருவர் சில பாதிப்புகளுக்குள்ளாகும்போது அவர்களுக்கு சட்டப்படியான பட்டியலினத்தவர் என்ற ஜாதி அங்கீகாரம் இல்லாமல் போய்விடும் என்பதைத்தான் இவ்வளவு பெரிய கதையாக தெரிவித்திருக்கிறார்கள்.
ருத்ரபிரபாகரனாக வரும் ரிச்சர்டு எந்தவிதத்திலும் ஜாதி ரீதியான வன்மத்தை வசனம் வாயிலாக வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். சொல்லப்போனால் அவருக்கு கிறிஸ்தவரான தம்பி ராமையா உதவுவதாக காட்டி காட்சிகளை பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.
போதைப் பொருள் விவகாரமாக இடைவேளை வரை சென்ற கதை பின்னர் கிறிஸ்தவ மத விவகாரம் பற்றி விமர்சிக்கத் தொடங்கி விடுவது சீண்டலாக தோன்றுகிறது.
பாதிரியார்போன்று மேடையில் தோன்றும் மனோபாலா பக்தர்கள் தரும் பணத்துக்கு ஏற்பத்தான் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்று வசனம் பேசுவது கிண்டல் தொணியாக ஒலிக்கிறது.
அவர் பேசும் சில வில்லங்கமான வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருப்பது சர்ச்சைகளை தவிர்த்திருக்கிறது.
பட்டியலினத்தை சேர்ந்த வழக்கறிஞர் நான் என்று பகிரங்கமாக கோர்ட்டில் வாதம் செய்யும் ராதாதாவி தனது நடிப்பில் முன்னிற்கிறார். அம்பேத்கரை காந்திக்கு நிகரானவர் என்று சொல்லி பெருமை பேசுவது வரவேற்கத்தக்கது.
வில்லன் வாதாபிராஜனாக வரும் கவுதம் மேனன் யாரின் பிரதிபலிப்பு என்பதுபற்றி அரங்கில் சில சலசலப்பு எழுகிறது. ஆனால் அவர் எடுத்தி ருக்கும் வில்லன் அவதாரம் அவரது நடிப்புக்கு முத்திரை பதித்திருக்கிறது.
தம்பி ராமையா கதாபாத்திரம் நடுநிலைபாத்திரமாக உலா வருகிறது. நீதிபதியாக வரும் மாளவிகா அவினாஷ் கணீர் குரலில் பேச நீதிமன்ற நடைமுறைகள் தெளிவாக படமாகி இருக்கிறது.
தன்னால் மாறன் இறந்துவிட்டானே என்றுகுற்ற உணர்வில் தவிக்கும் ரிச்சர்டு தன்னால் கொல்லப்பட்ட வாதாபி கதாபாத்திரத்தை தான் கொன்றதாக மாறனின் தாய் கோர்ட்டில் கூறும்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் லேசாக எடுத்துக் கொள்வதுமுரண்பாடு.
ரிச்சாட்ரின் மனைவியாக வரும் தர்ஷா குப்தா யதார்த்தமான மனைவியாக வாழ்ந்திருக்கிறார்.
சர்ச்சைகள் வந்தாலும் அதை சந்திக்கும் தைரியத்துடன் கருத்துக்களை வெளிப் படுத்தும் இயக்குனர் மோகன் ஜி சட்ட ரீதியாக பதிக்கப்படும் அனைத்து தரப்பு நியாங்களையும் பேசுவாரா என்பதுபோகப்போக தெரியும்.
பரூக் ஜே பாஷா ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார்.ஆக்ஷன் காட்சிகள் வேகம் குறைந்து காணப்பட்டாலும் ஜூபினின் அதிரடி இசை அதை வேகப்படுத்தி காட்டுகிறது.
ருத்ர தாண்டவம்- சட்ட அலசல்.