படம்:நிழற்குடை
நடிப்பு: தேவயானி, விஜித், கண்மணி, ஜி . வி. அஹானா அசினி, நிஹாரிகா, ராஜ்கபூர், இளவரசி, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, ஆண்டர்சன், அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ்குமார், பிரவின்
தயாரிப்பு:சிவா ஆறுமுகம்
இசை: நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு: ஆர் பி.குருதேவ்
இயக்கம்: சிவா ஆறுமுகம்
பி ஆர் ஒ: A. ஜான், தேன்மொழி
நிரஞ்சன் (விஜித்), லான்சி ( கண்மணி) மதம் மாறி திருமணம் செய்ததால் அவர்களை உறவினர்கள் தள்ளி வைக்கின்றனர். தனியாக வாழும் நிரஞ்சன், லான்சி தங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணை நியமிக்கின்றனர். பொறுப்பில்லாமல் இருக்கும் அவரை விரட்டிவிட்டு ஜோதிம்மா( தேவயானி) கேர் டேக்கராக நியமிக்கப்படுகிறார். அவர் குழந்தையை நல்ல முறையில் வளர்க்கிறார். இந்நிலையில் நிரஞ்சன், லான்சி அமெரிக்காவில் செட்டிலாக முடிவு செய்கின்றனர். இதற்கிடையில் குழந்தை கடத்தப்படுகிறது. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
சமீபகாலமாக லப்பர் பந்து, டூரிஸ்ட் பேமலி என்று குடும்ப படங்கள் ரசிகர்கள் கவனத்தை கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் திரைக்கு வந்திருக்கிறது நிழற்குடை.
நீண்ட நாட்களுக்கு பிறகு தேவயானி திரையில் தோன்றியிருக்கிறார். குடும்ப பாங்கான வேடமென்றால் இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவது போல் ரசித்து நடிப்பார் தேவயானி.
குழந்தையை அன்பாக கவனித்து தேவயானி வளர்க்கும் விதத்தை பார்க்கும்போது இப்படியொரு கேர் டேக்கர் நம் குழந்தைக்கு கிடைக்க மாட்டார்களா என்று பல இளம் தம்பதிகள் ஏங்குவார்கள்.
குடும்ப கதையில் கொஞ்சம் ட்விஸ்ட், கொஞ்சம் சஸ்பென்ஸ் என்று மசாலா சேர்த்து காட்சிகளை வேகப்படுத்த முயன்றிருக்கிறார்கள். .
விஜித், கண்மணி நாகரீக தம்பதிகளாக இயல்பாக நடித்துள்ளனர். ஆனாலும் இருவருக்குள் கெமிஸ்ட்ரி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
ஒரு சில காட்சியில் வந்தாலும் வடிவுக்கரசி உருக்கமாக நடித்து மனதை நெகிழ வைக்கிறார்.
காமெடி இல்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது வில்லன்போல் வரும் தர்ஷனை காமெடி பீஸ் ஆக்கிவிடுகிறார்கள்.
நரேன் பாலகுமார் இசையில் மெலடி மெட்டு கேட்கலாம்.
ஆர். பி.குருதேவ் பளிச்சென ஒளிப்பதிவு செய்துள்ளார்.
90ஸ் குடும்ப கதையொன்றை தெளிந்த நீரோடையாக இயக்கியிருக்கிறார் சிவா ஆறுமுகம்.
நிழற்குடை – பெண்களுக்கு பிடிக்கும்.