மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்மணிகளைக் காப்போம் என்ற தலைப்பில் முதல்வர் மு க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது :
கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது.
ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோரில் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவர்கள் தத்தெடுத்தால் குழந்தைகள் மனரீதியிலாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாநில துறைகளும் சிறார் நீதி சட்டம் அடிப்படையில் பெற்றோரை இழந்தவர்களைப் பராமரிக்க “உறவினர் பராமரிப்பு திட்டத்தை” (kinship care) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக செயல்படுத்த வேண்டும்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சார்பில் இந்த நெருக்கடியான காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அவர்களை பராமரிக்கவும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கடிதத்தில் கூறியுள்ளார்.
