படம்: மிராய்
நடிப்பு: தேஜா சஜ்ஜா, மனோஜ் மன்ச்சு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெகபதிபாபு, ஜெயராம்
தயாரிப்பு: டி ஜி விஷ்வ பிரசாத், கிரித்தி பிரசாத்
இசை: கௌர ஹரி
ஒளிப்பதிவு: கார்த்திக்கட்டம் நேனி
இயக்கம்,: கார்த்திக் கட்டம் நேனி
பிஆர்ஓ: யுவராஜ் அண்ட் டீம்
அசோக மன்னர் பல நாடுகளைப் போரிட்டு பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு அரிதான கடவுள் சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை 9 புத்தகங்களில் பிரித்து வைத்து அதை 9 வீரர்களிடம் கொடுத்து வைக்கிறார். காலகட்டங்கள் மாறுகிறது. 21ம் நூற்றாண்டில் அந்த ஒன்பது புத்தகங்களை கைப்பற்றி கடவுள் சக்தியை அடைய முயற்சிக்கிறான் தீய எண்ணம் கொண்ட மகாவீர ராமா (மனோஜ் மன்ச்சு) இந்நிலையில் இந்த அசம்பாவிதத்தை தடுக்க எதிர்காலத்தை கணிக்க கூடிய அம்பிகா (ஸ்ரேயா) தான் பெற்றெடுக்கும் குழந்தை வேதாவை அகத்தியர் சொல்படி புண்ணிய சேத்திரத்தில் விட்டு செல்கிறாள். அனாதையாக வளரும் வேதா (தேஜா சஜ்ஜா ) கிடைத்த வேலையை கொண்டு வாழ்க்கை ஓட்டுகிறான். ஒரு கட்டத்தில் அவனை தேடி இமாலயாவிலிருந்து பெண் ஒருவர் வருகிறார். ஏற்கனவே ஆறு புத்தகங்களை கைப்பற்றி விட்ட மகாவீர ராமா அடுத்த 3 புத்தகங்களையும் கைப்பற்றி விட்டால் அவன் சாகா வரம் பெற்று விடுவான். அதன் பிறகு மக்கள் மடிவார்கள். எனவே அவனிடம் ஒன்பதாவது புத்தகமான அமர புத்தகத்தை கிடைக்க விடாமல் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். முதலில் அதை நம்ப மறுக்கும் வேதா பின்னர் சில அபூர்வ சம்பவங்களை கண்டு மகாவீராவை எதிர்க்க துணிகிறான். அதற்காக ராமரின் அருள் பெற்ற மிராய் என்ற ஆயுதம் கொண்டு வர செல்கிறான். அதனை வேதாவால் கொண்டுவர முடிந்ததா? மகா வீராவை எதிர்கொள்ள முடிந்ததா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
கடந்த ஆண்டு வெளிவந்த அனுமான் படத்தில் நடித்த ஹீரோ தேஜா சஜ்ஜா இந்த படத்தில் வேதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் முதல்பாதி வரை விளையாட்டுத் தனமாக நடித்துக் கொண்டிருக்கும் தேஜா ஒரு கட்டத்தில், தான் யாருடைய பிள்ளை என்பதை உணர்ந்து தன் தாயின் சபதத்தை நிறைவேற்ற முடிவு செயத பிறகு அவரது நடிப்பில் புது வேகம் பிறக்கிறது.
மிராய் என்ற ஆயுதத்தை எடுப்பதற்காக இமயமலையின் தென்பகுதிக்கு செல்லும் தேஜா அந்த ஆயுதத்தை காவல் காத்து வரும் ராட்சத ஜடாயுவிடம் ( கழுகு) சிக்கி அதை எதிர்த்து போராடுவது படபடப்பு.

மிராய் ஆயுதம் கையில் கிடைத்த பிறகு தேஜா சஜ்ஜா ஒரு சூப்பர் மேனாகவே மாறி விடுகிறார். அதன் பிறகு என்ன ஹாலிவுட் படமாக இருந்தால் கிரகத்துக்கு கிரகம் தாவி சண்டை போடுவார்கள் இது ஆன்மீக பக்தி படம் அல்லவா? அதனால் புண்ணிய தளங்களுக்கு மாறி மாறி சென்று வில்லன் மனோஜ் உடன் கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் போன்ற யுக்திகளை பயன்படுத்தி மோதுகிறார்கள்.
தீமை அழிந்து தர்மம் காக்கப்படும் என்பது பொது நியதி அதன்படி தீய குணம் கொண்ட வில்லன் மனோஜ் ஆன்மீக சக்தி கொண்ட தேஜா சஜ்ஜா எப்படி அழிக்கிறார் என்பதை வான வேடிக்கை மயமாக டிசைன் டிசைனாக சண்டை காட்சிகள் அமைத்து கிளைமாக்ஸ் வரை படத்தை நகர்த்துகிறார்கள்.
தேஜா சஜ்ஜாவின் தாயாக ஸ்ரேயா மாறுபட்ட வேடத்தில் தோன்றுகிறார்.
மேலும் ரித்திகா நாயக், ஜெகபதிபாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜி விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.
கௌர ஹரி இசை அமைத்துள்ளார்
கார்த்திக் கட்டம்நேனி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார். இமயமலை பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் லொகேஷன்கள் ஒருமுறை அங்கு நேரில் சென்று வர வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
சமீப காலமாக சினிமா, டிவி என எல்லாவற்றிலும் ராமாயணம், ராமர் பற்றிய கதைகள் தான் வந்துக் கொண்டிருக்கிறது. வடநாட்டில் தான் ராமர் பேமஸ். அங்கு தீர்மானம் செய்து அரசியல் கட்சி ஒன்று ராமர் கோயில் கட்டியது. தென்னிந்தியாவை பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாடு முருக பக்தி நாடாக உள்ளது, ஆந்திரா தெலுங்கானா வெங்கடாஜலபதி பக்தி கொண்டவர்களாக பக்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த கடவுள்களைப் புறம் தள்ளிவிட்டு ராமரை மட்டும் மையமாக வைத்து சினிமா டிவிகளில் படம் எடுப்பது ஏன் என்ற கேள்வி சமீப காலமாக எழ தொடங்கியிருக்கிறது. என்னதான் வலுக்கட்டாயமாக ராமரை தென்னிந்தியாவுக்குள் திணிக்க முயன்றாலும் அது வீண்தான். முருகர் மீதும், வெங்கடாஜலபதி மீதும், அம்மன்கள் மீதும் பக்தர்கள் வைத்திருக்கும் பக்தியை மாற்ற முடியாது.
இனி ஒரு மாற்றத்திற்காக கிருஷ்ணர், வெங்கடாஜலபதி, முருகர், அம்மன் போன்ற பக்தி படங்களை தருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மிராய் – கொஞ்சமாக புராணத்தை மிக்ஸ் செய்த ஒரு பேன்டசி கதை.

Review By
K Jayachandhiran
trendingcinemasnow.com
