படம்: மஹாவீர்யர்
நடிப்பு: நிவின் பாலி, ஆசிப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவத்ஸா, சித்திக், விஜய்மோகன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கதிர் கரமானா, கிருஷ்னபிரசாத், சூரஜ் எஸ்.குரூப்
தயாரிப்பு: நிவின் பாலி, பி.எஸ்.ஷாம்னாஸ், அப்ரிட் ஷைன்
இசை: இஷான் சாப்ரா
ஒளிப்பதிவு : சந்த்ரு செல்வராஜ்
டைரக்ஷன்: அப்ரிட் ஷைன்
பி ஆர் ஒ: யுவராஜ்
ஸ்ரீருத்ர வீர மஹாவீர் அக்ரசேனா மகாராஜாவுக்கு (லால்) தீராத விக்கல் வாட்டுகிறது. நாட்டு மருந்துகள் சாப்பிட்டும் பலனில்லை. இந்நிலையில சுவாமி அபூர்ணாநந்தன் (நிவின்பாலி) கிராமம் ஒன்றிற்கு வருகிறார். மக்கள் அவரிடம் ஆசி வாங்குகின்றனர். திடீரென்று அருகில் உள்ள கோவிலிலி ருந்து ஆஞ்சநேயர் சிலை காணாமல் போகிறது. காணாமல் போன சிலை சாமியார் அருகிலிருக்கிறது. அவர்தான் சிலையை திருடியதாக போலீஸ் வழக்கு தொடுக்கிறது. கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. தன் சார்பில் சாமியார் அபூர்ணநந்தனே வாதாடுகிறார். அதேகோர்ட்டில் இளம்பெண்னை மகாராஜா கடத்தி சென்றுவிட்டதாக வழக்கு வருகிறது. விசாரணையில் மகாராஜாவே நேரில் ஆஜராகிறார். கோர்ட் விதிகளுக்கு ஏற்ப மகாராஜா விசாரணைக்கு ஒத்துழைக்கிறார். இளம் பெண்ணை மந்திரியை விட்டு வலுக்கய்டாயமாக அழைத்துச் சென்றது ஏன்? மகாராஜாவின் தீராத விக்கலுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன தொடர்பு? இதில் அபூர்ணா நந்தா சுவாமியின் பங்கு என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
மலையாளத்தில் வரும் மாறுபட்ட படங்களில் ஒன்றாக மஹாவீர்யர் படம் வந்திருக்கிறது மன்னர் காலத்தையும், ஜனநாயக காலத்தையும் இணைத்து ஒரு கதையாக அதுவும் உயிரோட்டமான கதையாக இப்படத்தை இயக்கி உள்ளார் அப்ரிட் ஷைன். இப்படி நிஜத்தில் நடக்குமா என்றால் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.
அரண்மனையில் காட்சி தொடங்குகிறது மகாராஜாவுக்கே உரிய கம்பீரத்துடன் கண் நிறைய நிற்கிறார் லால். அவருக்கு ஏற்படும் விக்கல் தொல்லையும் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும் காணும்போது இந்த விக்கல்தான் மன்னர் காலத்தையும், ஜனநாயக காலத்தையும் இணைக்கப்போகிறது என்பதை எண்ணிக்கூட பார்ர்க்க முடியவில்லை.
மன்னர் கதையாக தொடரப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது திடீரென்று சாமியார் நிவின்பாலியை சிலை திருடியாதாக போலீஸ் கைது செய்து கோட்டில் ஆஜர்படுத்துவதும் கோர்ட்டில் வாத பிரதிவாதம் நடந்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று .மகாராஜாவும் மந்திரியும் சக ஊழியர்களுடன் ஆஜராவதும், மன்ன்ரைக் கண்டதும் நீதிபதியே இருக்கையிலிருந்து எழுந்து வணங்குவதும் சிலிர்ப்பு.
பூக்கார பெண் ஷான்வி ஸ்ரீவத்ஸாவை மன்னரின் உத்தரப்படி மந்திரி வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்ற தற்கான விசாரணையை நீதிபதி நடத்துவதும் அதுவும் கோர்ட் கூண்டில் மன்னர் லாலை நிறுத்தி சாட்சிகள் விசாரிக் கப்படுவது எப்போது இந்த மன்னர் என்ன வம்பு செய்வாரோ என்ற பதற்றத்திலேயே காட்சிகள் நகர்கிறது.
ஷான்வியின் கண்ணீர் பெற்று அதை குடித்தால் தனது விக்கல் நிற்கும் என்று கனவில் தோன்றியதாக லால் கூறியதும் ஷான்வி கண்களில் கண்ணீரை வரவழைக்க நீதிபதி செய்யும் வேலைகள் அதிர்ச்சியூட்டுகிறது. ஒருகட்டத்தில் ஷான்வியை கிள்ளச் சொல்லியும், அவரது ஆடையை கிழிக்கச் சொல்லியும் போலீஸுக்கு உத்தரவிடுவதும் அவ்வளவு கொடுமை செய்தும் ஷான்வி கண்களில் கண்ணீர் வராததும் அடுத்து என்ன தண்டனை தருவாரோ என்ற பீதி பரவுகிறது.
சாமியாராக வரும் நிவின்பாலி ஷான்வி கண்களில் கண்ணீர் வரவழைப்பதாக கூறி மயிலிறகில் அவரை வருடுவதும் அதன்மூலம் கோப்பை நிறைய கண்ணீர் பெற்று தருவதும் ஏதோ அதிசயம் நடப்பதுபோல் உள்ளது.
நிவின் பாலி, பி.எஸ்.ஷாம்னாஸ், அப்ரிட் ஷைன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.
இஷான் சாப்ரா இசையும்
சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவும் பலம்.
அப்ரிட் சைன் மலையாளத்துக்கே உரித்தான வாசனை மாறாமல் படத்தை இயக்கியிருக்கிறார்.
ம்ஹாவீர்யர் – மன்னர், ஆன்மிகம், நீதிவிசாரணை கலந்த கலவை.

