படம்: மஹா அவதார் நரசிம்மா
நடிப்பு: அனிமேஷன் கதாபாத்திரங்கள்.
தயாரிப்பு: ஹோம்பாலே பிலிம்ஸ், கிளீம் புரொடக்ஷன்
இசை: சாம் சி எஸ்
இயக்கம்: அஸ்வின் குமார்
பிஆர்ஓ: யுவராஜ்
புராண இதிகாச கதைகளை மையமாக வைத்து மஹா அவதார் நரசிம்மா உருவாகி இருக்கிறது. 1960 காலகட்டங்களில் பக்த பிரகலாதா படம் ரங்காராவ் நடிப்பில் வந்திருக்கிறது. அந்த கால பக்தி படம் 60 காலகட்ட பெருசுகளுக்கு இன்னும் நினைவில் இருக்கும் படமாகவே அது இருக்கிறது. இன்டர்நெட், செல்போன் காலமான இப்போதுள்ள 2k கிட்ஸ், ஜென் போல்ட் மற்றும் ஜென் கோல்ட் தலைமுறைகளுக்கு இதிகாசங்களையோ புராணங்களையோ படிக்க நேரம் இல்லாமல் செல்போன் புழுக்களாக மாறிவிட்டார்கள். இந்த தலைமுறைக்கு புராண இதிகாச கதைகளை சொல்லும் வகையில் மஹா அவதார் நரசிம்மா உருவாகியிருக்கிறது. இந்த காலத்தில் பொருத்தமான நடிகர் நடிகைகளோ அல்லது பிரம்மாண்ட அரங்குகளோ அல்லது கச்சிதமான மேக்கப் கைவண்ணமோ காட்ட முடியாது என்ற நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த படத்தை அனிமேஷன் படமாக உருவாக்கி இருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் மிக பொருத்தமாக ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அனிமேஷன்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது எதிர்பாராத ஆச்சரியம்.
அசுர இனத்தின் தலைவன் இரணிய கசிபு, பிரகலாதன் கதையுடன் அசரன் இரணியன் பிறந்த வரலாறு குறித்தும் இந்த அனிமேஷன் படத்தில் தொடக்க காட்சிகளில் சொல்லி இருப்பது தவறவிடக்கூடாத காட்சி.
இரணிய அசுரன் தனக்கு உயிருள்ள உயிரற்ற, இரவிலோ பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ , மனிதனாலோ மிருகத்தாலோ மரணம் வரக்கூடாது என்று பிரம்மனிடம் வரம் பெற்றுக்கொண்டு விஷ்ணுவின் பக்தர்களை கொன்று குவிக்கிறான், தேவர்களை அடிமைகளாக்கி வேலை வாங்குகிறான். தன்னையே கடவுளாக கும்பிடும்படி ஆணை யிடுக்கிறான். மறுத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இரணியன் வாரிசாக பிறக்கும் பிரகலாதா விஷ்ணுவை கடவுளாக ஏற்றுக்கொண்டு வழிபடுகிறான். அதை ஏற்காத தந்தை இரணியன் பிரகலாதாவை கொல்வதற்கு ஆணையிடுக்கிறான். ஒவ்வொரு முறையும் பிரகலாதா விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்து வருகிறான். இறுதியாக விஷ்ணு எங்கே இருக்கிறான் காட்டு என்று இரணியன் கேட்க தூணிலும் இருக்கிறான் , துரும்பிலும் இருக்கிறான் என்று பிரகலாதா சொல்ல. ஒரு தூணை இரணியன் பிளக்கிறான் அதிலிருந்து வெளிப்படும் நரசிம்ம அவதாரம் இரணியனை வதம் செய்கிறது.
காலம் காலமாக இந்த புராணக்கதை சொல்லப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலும் எல்லோருக்குமே இது தெரிந்த கதையாக இருக்கிறது. ஆனால் அதை அனிமேஷனில் எப்படி பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார்கள் என்பதை தான் இதில் நாம் பார்க்க வேண்டி உள்ளது.
அனிமேஷன் தொழில்நுட்ப குழுவினருக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்லலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் விதமாக கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிம்ம அவதார வடிவமைப்பு சிங்கமுகத்துடன் இதுவரை பார்க்காத புதிய, பயமுறுத்தும் விதமாக டிசைன் செய்திருப்பது அபாரம். இந்த அனிமேஷன் படத்தை அற்புதமாக இயக்கி இருக்கிறார் அஸ்வின் குமார்.
சாம் சி எஸ்சின் பின்னணி இசை பிரம்மாண்டத்தை உறுதி செய்கிறது.
மஹா அவதார் நரசிம்மா – ஒருமுறை பார்க்கத் தகுந்த அனிமேஷன் படைப்பு.

