படம்: மார்கன்
நடிப்பு: விஜய் ஆண்டனி, அஜய் தீசன், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பிரிகிடா, அர்ச்சனா, வினோத் சாகர்
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: எஸ்.யுவா
இயக்கம்: பியோ ஜான் பால்
பிஆர்ஒ: ரேகா
தனியாக செல்லும் இளம் பெண்கள் இரசாயன விஷ ஊசி போட்டு மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி விஜய் ஆன்டனி. இந்நிலையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடக்கிறது. ஊசி போட்டு கொல்லப் படுபவர்களின் உடல் தீயில் எரிந்ததுபோல் கருகி விடுகிறது.
இவன்தான் கொலையாளி என்று ஒருவனை விஜய் ஆண்டனி கைது செய்து விசாரிக்கிறார். அவன் கொலையாளி இல்லை என்பது தெரிவதுடன் கொலையாளியை கண்டுபிடிக்க சித்தர் மந்திரப்படி மாய உருவத்துக்கு மாறி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். இது வெற்றி பெற்றதா? கொலையாளி யார்? என்பதற்கு அதிர்ச்சி தரும் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
விஜய் ஆண்டனி ஏற்கனவே துப்பறியும் கதைகளில் நடித்திருந்தாலும் இப்படம் மாறுபட்ட கதைக்களமாக அமைந்துள்ளது. போலீசார் கண்டுபிடிக்க முடியாத கொலையாளியை சித்தர் மந்திரம் மூலம் நீர் மாய மனிதனாக மாறும் அஜய் தீசன் நீருக்குள் தம் கட்டி மூழ்கியிருந்து நீர் மனிதனாக மாறி கொலையாளியை பின் தொடர்வது ஆர்வத்தை தூண்டுகிறது. உண்மையிலேயே இப்படியொரு சித்தர் மந்திரம் இருக்கிறதா என்று இயக்குனரிடம் கேட்ட போது “ஆராய்ச்சிக்கு பிறகுதான் இக்காட்சியை வைத்தேன் அப்படியொரு மந்திர சக்தி இருக்கிறது” என்று சொல்லி ஆச்சர்யமூட்டினார். கொஞ்சம் கிண்டி கிளறிவிட்டால் இதுவே மீடியாக்களில் விவாதமாகி படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும். ஐடியா கொடுத்தாச்சு இனி படக் குழுதான் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும்.
விஜய் ஆண்டனிக்கு பெரிதாக ஜோடி, காதல் காட்சி எதுவும் இல்லை. ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார்.
படம் முழுக்க சஸ்பென்ஸ் த்ரில் என்று சென்றாலும் கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டத்தக்கது. அதேசமயம் திரைக் கதையில் இன்னமும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பிரிகிடா, அர்ச்சனா, வினோத் சாகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார்.
எஸ்.யுவா ஒளிப்பதிவு கிரைம் மூடை தக்க வைக்கிறது.
இயக்குனர் பியோ ஜான் பால் கிரைம் திரிலரில் புது முயற்சி செய்திருக்கிறார்.
மார்கன் – மாயம்.

