படம்: கும்கி 2
நடிப்பு: மதி, அர்ஜுன் தாஸ், ஷிரிட்டா ராவ் , ஹரிஷ் பாரேடி, ஸ்ரீநாத், நடக்கள் உன்னிகிருஷ்ணன், திருச்செல்வம், கொட்டச்சி, சூசன் ஜார்ஜ்,
தயாரிப்பு: துவால் காடா
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு,: சுகுமார்
இயக்கம்: பிரபு சாலமன்
பிஆர்ஓ: யுவராஜ்
அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்கிறார் மதி. பள்ளியிலும் அவரை யாரும் நண்பராக சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்குகிறார்கள். இதனால் வேதனை அடையும் மதிக்கு அவரது ஆசிரியர் அறிவுரை கூறுகிறார். “நீ இயற்கையிடம் பழகு அது உன்னிடம் அன்பு காட்டும்” என்கிறார். மரம், செடி, கொடி, ஆறு போன்றவற்றில் தனது கவனத்தை செலுத்தும் மதிக்கு குட்டி யானை ஒன்று நண்பன் ஆகிறது. அதனிடம் அன்பு காட்டி விளையாடி ஒன்றாகவே வளர்கிறார் மதி. திடீரென்று அந்த யானை கடத்தப்படுகிறது. அதனைத் தேடி மதி அலைகிறார். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக யானையை பலி கொடுக்க கடத்திய விவரம் தெரிகிறது. அந்த யானையை அவர்களிடமிருந்து மதியால் மீட்க முடிந்ததா? என்பதுதான் கிளைமாக்ஸ்.
புதுமுக நடிகர் மதி ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். முதல் படத்திலேயே யானையுடன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் என்றாலும் கொஞ்சமும் பயமில்லாமல் பெருத்த உருவம் கொண்ட யானையுடன் மதி நடித்திருப்பது அவர் அந்த யானையுடன் எத்தனை மாதம் அன்பு காட்டி பழகி இருப்பார் என்பது ஒவ்வொரு காட்சிகளிலும் இருவருக்குமான அன்பும் நட்பும் வெளிப்படுத்துகிறதுகாட்டுப்பகுதிக்குள் யானை மீது அமர்ந்து மதி சவாரி செய்யும் காட்சிகள் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் யானை மீது அமர்ந்து அவர் சவாரி செய்திருப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது யானை சவாரி செய்தவர்களுக்குத்தான் புரியும்.
வில்லன் கூட்டத்திடமிருந்து யானையை மதி மீட்டுக் கொண்டு தப்பி வரும்போது அவர்களை போலீஸ் துரத்தி பிடிக்க முயல்வதும் நடுரோட்டிலேயே போலீஸ் கூட்டத்தை யானை தூக்கி வீசி பந்தாடுவது சிறுவர்களை உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்ய வைக்கும்.
படத்தில் இடைவெளிக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் அர்ஜுன் தாஸ் அன்பாக பேசி நல்லவன் போல் ஒரு முகமும், யானையை கடத்திச் செல்ல உதவும் சைலன்ட் வில்லனாக இன்னொரு முகமும் காட்டி திரைக்கதையில் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிரிட்டா ராவுக்கு பெரிய வேலை இல்லாவிட்டாலும் அவருக்கு யானை சவாரியும், காட்டுப்பகுதிக்குள் ஓடும் ஓட்டமே மூச்சிரைக்கும் வேலையாக அமைந்திருக்கும். எதார்த்தமான நடிப்பால் மனதுக்குள் இடம் பிடிக்கிறார்.
ஹரிஷ் பரேடி, ஸ்ரீநாத், நடக்கல் உன்னிகிருஷ்ணன், , திருச்செல்வம், கொட்டச்சி, சூசன் ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
துவால் காடா படத்தை தயாரித்திருக்கிறார்.
கும்கி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அது வேறு கதை, இது வேறு கதை என்ற வகைப்படுத்தி கும்கி 2 படத்தை இயக்கி இருக்கிறார் பிரபு சாலமன்.
குழந்தைகளுக்கான படங்கள் வருவதில்லை என்ற குறையை போக்கும் வகையில் குழந்தைகளும் பெரியவர்களும் ரசித்து பார்க்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரபு சாலமன்.
நிவாஸ் கே பிரசன்னா இசை தெற்று பல்லாக துரித்துக் கொண்டு நிற்காமல் காட்சிகளோடு பயணித்திருக்கிறது.
படத்திற்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர் சுகுமார் கேமரா. முதல் காட்சியிலேயே அந்த பிரம்மாண்ட அருவியை காட்டி ரசிகர்களை கையைப் பிடித்து ஸ்கிரீனுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார். சில்லென்று வீசும் மழைக் காற்று முகத்தில் வந்து தழுவிச் செல்வது போல் உணர்வை காட்சிகள் ஏற்படுத்துவது அற்புத அனுபவம்.
கும்கி 2- காட்டுக்குள் யானையுடன் ஒரு பயணம்.

Review By
K Jayachandhiran
www.trendingcinemasnow.com
