லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற வெற்றி படங்களில் நடித்த கவின் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் பிளட்டி பெக்கர். இப்படத்தை ஜெயிலர், டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் தயாரிக்கிறார். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் முத்துக்குமார் எழுதி இயக்குகிறார்.
பிளட்டி பெக்கர் படம் பற்றி இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் கூறியதாவது:
வாழ்க்கையில் ஆசை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் ஓடி ஓடி உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் ஆனால் எந்த ஆசையுமே இல்லாத ஒரு நபர் தன் இஷ்டத்துக்கு வாழ ஆசைப்படுவார். அப்படியொரு கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். பிச்சைக்காரனாக அவர் வேடமற்றுள்ளார். அதற்கான கெட்டப் போட்டு பார்த்தோம்.. அதே கெட்டப்பில் அருகில் இருக்கும் தெருவுக்கு சென்று வந்தபோது ஒரு அக்கா இருபது ரூபாய் அவருக்கு பிச்சை கூட போட்டு விட்டார். அந்த அளவுக்கு தத்ரூபமாக அவரது கெட்டப் அமைந்துவிட்டது. வாழ்க்கையில் எந்த ஆசையுமே இல்லாத நவீனுக்கு திடீரென்று ஒரு ஆசை வருகிறது அதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
இந்த கதையை கவினிடம் கூறியபோது அவருக்கு பிடித்திருந்தது நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். அப்போது ஸ்டார் படத்தில் நடித்துக் கொண்டிருந்த தால் அந்த கெட்டப்பில் இருந்து அவரால் மாற முடியாத நிலை இருந்தது. ஆனால் அதே தோற்றம் எங்கள் படத்துக்கும் பொருந்தி வந்தது. இப்படத்தை தயாரிப்பது பற்றி வெவ்வேறு தயாரிப்பாளரிடம் கதை கூறினேன். ஒரு கட்டத்தில். இக்கதையை இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே நன்றாக இருக்கிறது நானே தயாரிக்கிறேன் என்று முன்வந்தார். நெல்சன் கதை என்றாலே காமெடியாக இருக்கும் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் இதில் முழுக்க காமெடி படம் கிடையாது ஆங்காங்கே காமெடி வரும்.
கவின் ரசிகர்களை கவர வேண்டும் என்ற பாணியில் இப்படம் இருக்காது. இது முழுக்க முழுக்க கவின் நடிப்பை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. மாறுபட்ட பாத்திரத்திலேயே இதில் அவரை பார்ப்பார்கள். கதையில் சில திருப்புங்கள் உள்ளது. அதை இப்போது வெளிப்படுத்த முடியாது. இதில் கதாநாயகி இருக்கிறார், அவர் கவினுக்கு ஜோடியாக வர மாட்டார் அதேசமயம் கொஞ்சம் காதலும் கதையில் இருக்கிறது.
இது பீரியாடிக் படம் கிடையாது ஆனால் பீரியாடிக் தொடர்பாக ஒரு சின்ன கனெக்சன் இருக்கிறது. படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் அந்தக் காலத்து கேரக்டர் என்பதால் பீரியாடிக் தொடர்பு இருக்கும். ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம் ஆர் ராதா பிச்சைக்கார கதாபாத்திரத்திற்கும் அதேபோல் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் கதாபாத்திரத்திற்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எம் ஆர் ராதா டச் ஒன்று இப்படத்தில் இருக்கும்.
இதன் படப்பிடிப்பு மூன்று கட்டமாக நடந்தது. படப்பிடிப்பு நேரத்தில் ஒரு சில காட்சிகளில் எப்படி இருந்தால் காட்சி நன்றாக இருக்கும் என்பது குறித்து கவினும் நானும் ஆலோசித்து பொருத்தமான காட்சியாக உருவாக்கினோம். இது முற்றிலும் ஒரு கமர்சியல் படம் தான்.
இவ்வாறு இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் கூறினார்.
