படம்: கேம் சேஞ்சர்
நடிப்பு: ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி , சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா ஸ்ரீகாந்த், சுனில்
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு: திரு
இயக்கம்: ஷங்கர்
பிஆர்ஓ: சதீஷ், சிவா ( AIM)
கல்லூரியில் படிக்கும்போது கியாரா அத்வானியை காதலிப்பதற்காக தனது கோபத்தை கைவிடும் ராம் (ராம்சரண்) அவரது விருப்பப்படி ஐஏஎஸ் அதிகாரி ஆகிறார் ஆனால் திடீரென்று கியாரா எங்க போனார். என்று தெரியாமல் கல்யாணம் வேண்டாம் என்று வீட்டில் மறுப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார் ராம் . ஒரு சமயம் கியாராவை சந்திக்க மீண்டும் காதல் வளர்கிறது. இதற்கிடையில் ராம் வாழ்வில் மந்திரியாக இருக்கும் அரசியல்வாதி எஸ் ஜே சூர்யா குறுக்கிடுகிறார். நேர்மையான கலெக்டரான ராம்சரண், எஸ் ஜே சூர்யாவின் சட்ட விரோத செயல்களை தடுக்கிறார். இந்தப் பகை நீள்கிறது. ஒரு கட்டத்தில் பொது மேடையில் இருவருக்கும் மோதல் ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கிறார்கள். இருவரும் மாறி மாறி கன்னத்தில் அறைந்து கொள்கிறார்கள். இதையடுத்து இருவரது பதவியும் பறிக்கப்படுகிறது. மீண்டும் இவர்கள் பதவிக்கு வருகிறார்களா? உண்மையிலேயே ராம்சரண் யார்? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது.
ஷங்கர் படம் எப்படி இருக்கும் என்று ஒரு பார்முலா ஏற்கனவே ரசிகர்கள் மனதில் ஃப்க்ஸ் ஆகியிருக்கிறது அந்த பார்முலாவை கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் தந்திருக்கிறார்.
பணம் இல்லாத அரசியல் பற்றி பேசியிருக்கும் ஷங்கர் அது நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியம் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எல்லாம் கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.
கண்டிப்பான கலெக்டராக டிப்டாப்பாக வரும் ராம்சரண் பின்னர் தேர்தல் அதிகாரியாக மாறி அங்கும் தனது நேர்மையை காட்டுகிறார். ஆனால் இந்த தேர்தல் அதிகாரி கொஞ்சம் வித்தியாசமானவர். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல் எஸ் ஜே சூர்யா எவ்வளவு ரவுடிகளை கூட்டி வருகிறாரோ அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தனது அதிரடி ஆயுதங்களை ராம்சரண் தயார் செய்து வைத்து இருப்பது எதிர்பாராத ஷாக்.
நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் தாக்க வர அவர்களை புல்டோசர் கொண்டு ராம்சரண் அடித்து தூக்குவதெல்லாம் படு பயங்கரமான ஆக்ஷன் காட்சிகள். இதில் எத்தனை பேருக்கு எவ்வளவு அடிபட்டது என்பதெல்லாம் அந்த காட்சியில் நடித்தவர்களை கேட்டால்தான் தெரியும்.
ஒரு கலெக்டர், மந்திரியை எதிர்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிப்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். கேட்கவும் பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கும் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது
கியாரா அத்வானி அழகு பதுமையாக வருகிறார்.. ராம் சரணுடன் சேர்ந்து ரப்பர் பந்து போல் துள்ளி குதித்து நடனமாடி அசத்துகிறார். அவ்வப்போது இளவட்டங்களை கவர தாராள கவர்ச்சியையும் காட்ட தவறவில்லை.
காமெடிக்கு ஏதோ பஞ்சம் போல் இருக்கிறது. எஸ் ஜே சூர்யாவுக்கு ஜால்ரா போடும் ஜெயராம் கொஞ்சம் காமெடி செய்ய ஒரே காட்சியில் திடீரென்று வந்து போகும் பிரம்மானந்தம், சைடு சத்தியமாக வரும் சுனில் கலகலப்பூட்டுகிறார்கள். சமுத்திரக்கனிக்கெல்லாம் ஒரு வேலையும் இல்லை அஞ்சலிக்கு சற்று மாறுபட்ட வேடம் அதாவது ராம் சரணின் தாயாக நடித்திருக்கிறார்.
பாடல் காட்சியில் வழக்கம்போல் பிரம்மாண்டத்தை அள்ளி இரைத்திருக்கிறார் ஷங்கர். கண்ணுக்கும் காதுக்கும் காட்சியும் இசையும் விருந்தாகிறது.
திரு ஒளிப்பதிவு காட்சிகளை பிரகாசிக்க வைத்திருக்கின்றது.
ஆனால் ஒன்றை சொல்ல வேண்டும் ஷங்கர் எடுத்துக் கொள்ளும் எல்லா கதைகளுமே அரசியல், ஊழல் என்ற ஒரே வட்டத்தை சுற்றி வருகிறது. கேம் சேஞ்சரும் அந்த வட்டத்துக்குள் தான் கதை சுற்றுகிறது. கொஞ்சம் மாற்றி யோசித்து எந்திரன் படத்தை தந்தது போல் மீண்டும் ஒரு புதிய கதைக். களத்தை ஷங்கர் யோசித்தால் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும்.
தமன் எஸ் இசை ஏ ஆர் ரகுமான் ரேஞ்சுக்கு தூள் கிளப்புகிறார்.
கேம் சேஞ்சர் – பொழுது போகும்.

