நடிகை சமந்தா நடித்துள்ள தி பேமலி மேன்2 வெப் சீரிஸ் தமிழர்களுக்கு எதிரானதாக உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை
நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை
வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும்,அவர்களின்
வரலாற்றையும் அறியாத ,தகுதியற்ற நபர்களால்,தமிழின விரோதிகளால்
இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட
வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது
மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை
வன்மையாக கண்டிக்கிறேன்.
இத் தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும்.
இத்தொடரில் தமிழ் , முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.
தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால்
அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன
இவ்வாறு பாரதிராஜா கூறி உள்ளார்.
