படம்: பேட் கேர்ள் (BadGirl)
நடிப்பு: அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர்
தயாரிப்பு: வெற்றிமாறன் (கிராஸ் ரூட் கம்பெனி)
இசை: அமித் திரிவேதி
ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன்
இயக்கம்: வர்ஷா
பிஆர்ஓ: ரேகா
இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் இளம் பெண் வர்ஷா இவர் இயக்கி இருக்கும் முதல் படம் பேட் கேர்ள்.
பிராமண குடும்பத்தில் பிறந்த அஞ்சலியை அவரது தாயும் தந்தையும் கட்டுப்பாடுடன் வளர்க்க எண்ணுகிறார்கள். இந்த உடை அணியாதே, அவர்களுடன் பேசாதே என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். ஆனால் அஞ்சலிக்கு ஒரு சுதந்திர பறவை போல் வாழ வேண்டும் என்ற ஆசை. தன்னை யாரும் கட்டுப்படுத்த கூடாது, யார் தயவும் இல்லாமல் தனியாக வாழ வேண்டும், ஆண் உறவு என்ற கட்டுப்பாடு கோட்டுக்குள் சிக்காமல் யாரைப் பிடிக்கிறதோ அவர்களுடன் உறவாடுவது, எந்த வகையிலும் தன்னை கட்டுப்படுத்தும் திருமண உறவுக்குள் சிக்க கூடாது என்ற புதிய சிந்தனைகள் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரால் அப்படி வாழ முடிந்ததா, தான் இஷ்டப்படி வாழ்ந்த போது தன்னை பயன்படுத்தி கொண்டவர்கள் பின்னர் எப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டு செல்கிறார்கள் அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்ற பல சிக்கலான வாழ்க்கை முறைக்கு அஞ்சலி எப்படி விடை காண்கிறார் என்பதுதான் படத்தின் கதை
இப்படி ஒரு கதையை இளம்பெண் வர்ஷா யோசித்திருப்பதே அவரது முற்போக்கான சிந்தனையை காட்டுகிறது. இந்த கதாபாத்திரத்தில் பிராமண பெண்ணை இழுத்து விட்டிருப்பது தான் இந்தப் படத்துக்கு இவ்வளவு வில்லங்கம், எதிர்ப்பு, தடை, சென்சார் குறுக்கீடு போன்ற தடங்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் என்பதை படம் பார்க்கும்போது யூகிக்க முடிகிறது.
சுதந்திரமாக சுற்றித்திரிய வேண்டும் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி கதா பத்திரத்தை பார்க்கும்போது இப்படி ஒரு பெண்ணைத்தான் புரட்சி பெண்ணாக பாரதி கனவு கண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எந்த நடிகையும் ஏற்க துணியாத கதாபாத்திரத்தை அஞ்சலி ஏற்று நடித்திருப்பத்துடன் அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
தண்ணி அடிக்கிறார், தம்மடிக்கிறார், இளைஞர்களுடன் சல்லாபம் செய்கிறார் இவ்வளவு கூத்துக்கள் செய்தும் அவரை பெற்றோர் சகித்துக் கொண்டு வீட்டில் அன்புடன் நடத்துவது என்ன காரணமோ என்று தான் தெரியவில்லை
ஆணவ கொலைக்கு ஆதரவாக பேசி படம் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களுக்கு சம்மட்டியடி தரும் பாத்திரமாக அஞ்சலி கதாபாத்திரத்தை வெற்றிமாறனும், இயக்குனர் வர்ஷாவும் இணைந்து ஒரு திரைப் படைப்பாக தந்திருப்பது படத்தின் வெற்றி தோல்வி முக்கியமில்லை சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற துணிச்சலை காட்டுகிறது.
பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களும் புதுமுகம் என்பதால் யாருடைய முகமும் ஒரு முறை பார்க்கும் போது பதிய மறுக்கிறது.
அஞ்சலியின் தாயாக நடித்திருக்கும் பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தி மாறுபட்ட தோற்றத்தில் வருகிறார். பிராமண குடும்பத்தில் இப்படி ஒரு கருப்பு அழகியா என்று எண்ணும் அளவுக்கு அவரது தோற்றம் டிசைன் செய்யப்பட்டிருப்பது ஒரு நிறத்தின் அடிப்படையை தகர்த்திருக்கிறது.
வெளிநாடு திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு பாராட்டுக்கள் பெற்றதுடன் நம்மூர் இயக்குனர்கள் பலரும் உச்சி முகர்ந்து இந்த படத்தை பாராட்டி இருக்கிறார்கள். எவ்வளவோ படங்கள் அடல்ட் படங்களாகவும், ரத்த வெறி கொண்ட படங்களாகவும், மதவெறி, ஜாதி வெறி போன்றவற்றை தூண்டும் படங்களாகவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன அந்த படங்களுக்கு தணிக்கை குழுவும் அனுமதி தந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் மிக்க இந்த சமுதாயத்தில் ஒரு பெண் தன் இஷ்டப்படி வாழ நினைப்பதை தடுத்து நிறுத்தும் விதமாக பேட் கேர்ள் படத்திற்கு தணிக்கை தந்த இன்னலுக்கு அளவே கிடையாது. படத்தை துண்டு துண்டாக வெட்டி கையில் கொடுத்தாலும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவாள் அஞ்சலி என்பதை நிரூபிக்கும் வகையில் படத்தை துணிச்சலாக வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த பாராட்டு படத்தை இயக்கிய வர்ஷாவையும் சேரும்
ஒளிப்பதிவு இசை எல்லாமே சென்சார் கத்தரிக்கு பலியாகி இருக்கிறது. இவர்கள் ஆடு வெட்ட மாட்டார்கள், கோழி வெட்ட மாட்டார்கள் ஆனால் தங்கள் இனத்தைப் பற்றி பேசினால் போதும் துண்டு துண்டாக வெட்ட தவற மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.
பேட் கேர்ள் – அழகான குழந்தையை சென்சார். கத்தரி அங்க ஈனம் செய்திருக்கிறது

Review By
K Jayachandhiran
Trendingcinemasnow.com
