படம்: அஞ்சாமை
நடிப்பு: விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா, பாலச்சந்திரன் ஐஏஎஸ்,
தயாரிப்பு: டாக்டர் எம் திருநாவுக்கரசு
இசை: ராகவ் பிரசாத்
ஒளிப்பதிவு: கார்த்திக்
இயக்கம்: எஸ் பி சுப்புராமன்
வெளியீடு: ட்ரீம் வாரியர்ஸ் பிச்சர்ஸ்
பி ஆர் ஓ: ஜான்சன்
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் சர்க்கார் (விதார்த்). கூத்துக்கட்டும் கலைஞர். இவரது மகன்
அருந்தவம் . (கிருத்திக்) பள்ளி இறுதி தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெறுகிறார். அவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில் டாக்டர் படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்படு கிறது. கூலி வேலை செய்து மகனை படிக்க வைக்கும் சர்க்கார் தன் மகனை நீட் கோச்சிங் சென்டரில் படிக்க வைக்கிறார். தேர்வுக்கான மையம் தமிழ்நாட்டில் தேர்வு செய்யும் கிருத்திக்கிற்கு ஜெய்பூரில் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சர்க்காரும் அருந்தவமும்
வேறு வழி இல்லாமல்
ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு தேர்வு மையத்தை கண்டுபிடித்து தேர்வு எழுதுவதற்குள் விதார்த் மன உளைச்சலில் இறக்கிறார். தன் தந்தை சாவக்கு காரணம் அரசாங்கம் தான் என்று போலீசில் புகார் கொடுத்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். அதிகாரிகள் கூண்டில் நிறுத்தப் படுகின்றனர். சூடான வாத பிரதிவாதம் நடக்கிறது. இதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
சர்க்கார் என்ற தெருக்கூத்து கலைஞராக விதார்த் வித்தியாசமான வேடமேற்று நடித்திருக்கிறார். அவர் ராஜா வேடம் போட்டு நடிக்கும் காட்சி ஒரு சில நிமிடங்களே வந்தாலும் வித்தியாசமான விதார்த் கண்ணுக்குள் பதிக்கிறார். பின்னர் தனது இயல்பான நடிப்பு பாணிக்கு மாறி விடுகிறார்.
மகன் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்கும் போது அதை நிறைவேற்ற விதார்த் கூத்துக்கட்டும் வேலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு கூலி வேலைகள் செய்து மகனை படிக்க வைப்பது நம்மூர் கிராமங்களில் பல தந்தைமார்கள் செய்யும் செயல்…
விதார்த்தின் மகனாக கிருத்திக் மோகன் நடித்திருக்கிறார். சிறு பையனாக இருந்தாலும் நடிப்பில் பெரும் சவாலை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார். கோர்ட்டில் சாட்சி கூண்டில் நின்று தன் தந்தை இறக்க யார் காரணம் என்பதை அவர் கண்ணீர் மல்க சொல்லும் போது மனது கனக்கிறது
எதிர்பார்க்காத ஷாக் தந்திருக் கிறார் வாணி போஜன். மேக்கப் போட்டுக் கொண்டு அழகாக பாட்டு பாடி கொண்டு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த வாணி போஜன் இப்படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்திருக் கிறார். அதுவே ஒரு துணிச்சலான முயற்சி.
தன் மகன் படிப்பிலிருந்து திசை மாறும் சூழல் எழும் நிலையில் வாணி போஜன் மகனை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்த வைப்பதில் தாயின் கடமை பொறுப்பில் மிளிர்கிறார். விதார்த் இறந்த தகவல் அறிந்து கதறும் காட்சியும் பதற வைக்கிறது
கோர்ட் காட்சிகளில் நீதிபதியாக வரும் பாலச்சந்திரன் ஐஏஎஸ் தனது கணீர் குரலில் நீட் தேர்வு குறித்து அரசு அதிகாரிகளுக்கு எழுப்பும் கேள்விகள் சாட்டை விளாசல்.
மாணவன் கிருத்திக்கிற்கு ஆதரவாக போலீஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கறிஞர் கோட் மாட்டிக் கொண்டு கோர்ட்டில் ரஹ்மான் வாதாடும் காட்சிகள் நெற்றி பொட்டில் அறைவது போல் பளார் பளார் என வசன ஒலி கேட்கிறது.
டாக்டரான எம் திருநாவுக்கரசு இப்படத்தை தயாரித்திருப்பது அவரது சமூக பொறுப்பை வெளிப்படுத்துகிறது.
எஸ்.பி. சுப்புராமன் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றதற்கே கைக்குலுக்கலாம். . நாலு பாட்டு நாலு சண்டை காட்சி என்று கமர்சியலாக ஏதோ ஒரு கதையை சுருட்டி தந்து விட்டு போகாமல் சமூக அக்கறையுடன் நீட் தேர்வை குறி வைத்து அவர் இயக்கிய இருக்கும் காட்சிகள் திரையில் ஒரு வரலாற்று பதிவூ.
கதை சொல்வதில் இருந்த துணிச்சல் அதற்கு விடை சொல்லும் கிளைமாக்சில் இல்லாமல் போனதுதான் பெரிய ஏமாற்றம்.
கார்த்திக் ஒளிப்பதிவு, ராகவ் பிரசாத் இசை இரண்டும் படத்திற்கு கை கொடுக்கின்றன.
இப்படி ஒரு படத்தை கையில் எடுத்து எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்டிருப்பது அந்நிறுவனத்திலன் அஞ்சாமை உணர்வு.
அஞ்சாவை – ஒன்றிய அதிகாரத்தின் தோலுரிப்பு.