படம்: அக்கா குருவி
நடிப்பு: மாஸ்டர் மஹீன், பேபி தாவ்யா, வி.எஸ்.குமார், தாரா ஜெகதாம்பி, ஹரிஷ், மீனாட்சி
தயாரிப்பு: மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு : உத்பல் வி நாயனார்
இயக்கம்: சாமி
பி. ஆர் ஓ: ஜான்சன்
ஐ டி ஐ படித்து சிறுதொழில் செய்யும் ஏழை தந்தைக்கு தேவா, சாரா என்ற பிள்ளைகள் உள்ளனர். வறுமையிலும் குழந்தைகளை கான்வென்ட்டி ல் படிக்க வைக்கிறார். இருவரும் வெவ்வேறு பள்ளியில் படிக்கின்றனர். சாராவின் ஷூ கிழிந்துவிட அதை தைத்து எடுத்துவரும் தேவா மளிகை கடைக்குவெளியே வைத்து விட்டு உள்ளே அரிசி வாங்க செல்கிறான். இதற்கிடையில் அந்த ஷூவை பழைய பொருள் என்று எண்ணி பேரிட்சம் பழக்காரர் தன் வண்டியில் வைத்து எடுத்துச் செல்கிறார். வெளியில் வந்து பார்க்கும் தேவா ஷூ காணாமல் போனதால் அதை கண்டுபிடிக்க தேடியும் கிடைக்கவில்லை. இப்போது தங்கை சாராவுக்கு ஸ்கூலுக்கு போட்டுச் செல்ல ஷூ இல்லை. தந்தையாலும் புது ஷூ வாங்கித் தர முடியாதநிலை. ஷூ காணாமல்போனதை சொன்னால் அப்பாவிடம் அடி கிடைக்கும். இதனால் தேவா தனது ஷூவை தங்கைக்கு தந்து போட்டுச் செல்ல சொல்கிறான். அவள் பள்ளியிலிருந்து மதியம் வந்தவுடன் அதே ஷூவை தேவா பள்ளிக்கு போட்டுச் செல்கிறான்.இதனால் தினமும் பள்ளிக்கு லேட்டாக செல்கிறான். தலைமை ஆசிரியர் தேவாவை கண்டிக்கிறார். அதிர்ஷ்டவசமாக பள்ளியில் மாரத்தான் ரேஸ் நடக்கிறது. அதில் மூன்றாவது பரிசாக ஷூ தரப்படுகிறது. அதை பரிசாக பெற்று தங்கைக்கு தர எண்ணுகிறான். அதுகிடைத்ததா என்பதற்கு உருக்கமான பதில் அளிக்கிறது அக்கா குருவி.
ஹாலிவுட் ஆஸ்கர் போட்டியில் பங்கு பெற்ற சில்ரன் ஆஃப் ஹெவன் என்ற படத்தை தழுவி அக்கா குருவி எடுக்கப் பட்டிருக்கிறது. இப்படத்தை இயக்கி இருப்பவர் வில்லங்கமான உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி. இவரா இப்படியொரு குழந்தைகள் படத்தை ஹாலிவுட் தரம் குறையாமல் இயக்கி உள்ளார் என்று யாராலும் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது.
தேவாவாக நடித்திருக்கும் சிறுவன் மாஸ்டர் மஹீன், தங்கை சாராவாக நடித்திருக்கும் பேபி தாவ்யா, இசை அமைத்திருக்கும் இசைஞானி இளையராஜா மூவரும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு காட்சியும் ராஜாவின் இசை வண்ணமில்லாமல் நகரவில்லை.
தங்கையின் ஷூ காணாமல் போனதும் பதற்றமடையும் மஹீன் அதை தேடி குபபை மேட்டில் அலைவதும் எங்கும் கிடைக்காத்தால் சோர்ந்து போய் வீட்டுக்கு வந்து தங்கையிட.ம் சொல்லி தன் ஷூவை பள்ளிக்கு போட்டுச் செல்லும்படி கூற அங்கிருந்து குழந்தைகள் இருவரின் ஒட்டம் ஆரம்பிக் கிறது. அந்த ஓட்டம் கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.
இருவரும் ஒரே ஷூவை மாறி மாறி பள்ளிக்கு போட்டுச் சென்று நாட்களை கடத்துவதும் பள்ளி முடிந்தவுடன் அண்ண னுக்கு ஷூ தாவேண்டுமே யென தங்கை தாவ்யா மூச்சிறைக்க ஓடி வருவதும் அந்த ஷூவை வாங்கி அணிந்துக்கொண்டு அண்ணன் மஹீன் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஓடுவதும் பார்வையாளர்களை வியர்த்து மூச்சிறைக்க செய்துவிடுகிறது.
தங்கைக்கு ஷூ பரிசாக வாங்கித் தர 4 கிலோ மீட்டர் தூர மாரத்தன் போட்டியில் கலந்துகொண்டு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க மஹீன் ஓடும்போது நெஞ்சில் ஒரு படபடப்பு தொற்றிக்கொள்கிறது.
படத்தில் இளம் காதல் ஜோடிகளாக வரும் ஹரிஸ், மீனாட்சி இருவரின் காதல் இசசைஞானியின் பழைய காதல் பாடல்கள் பின்னணியில் திரையில் விரியும்போது நம்மையும் அறியாமல் ஒரு பரவசம் மனம் முழுவதும் பரவுகிறது. 80, 90 களின் காலச்சுவட்டை கண்முன் நிகழ்த்தி அற்புதம் புரிந்திருக்கிறது. குழந்தைகளுக்காக ஒருமுறை, ராஜாவின் இசை பிரவாகத்துக்காக இன்னொரு முறை என படத்தை பார்த்தாலும் சலிக்காது.

இயக்குனர் சாமி தன் மீதிருந்த ஏ சான்றிதழ் இயக்குனர் என்ற முத்திரையை துடைத்தெறிந் திருக்கிறார். நல்ல படம் தந்தமைக்காக அவருக்கு பாராட்டுகளை அள்ளி குவிக்கலாம்.
உத்பல் வி நாயினார ஒளிப்பதிவு பசுமையையும், மழலைகளின் வாசத்தையும் உச்சிமுகரச் செய்திருக்கிறது.
படத்துக்கு அக்கா குருவி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? அக்கா குருவி என்றால் என்ன அர்த்தம் என்பதற்கும் படத்திலேயே விளக்கம் அளித்திருப்பது ரொம்பவே பொருத்தம்.
அக்கா குருவி – ஊர்முழுக்க சிறகடித்து பறக்க செய்ய வேண்டிய கடமை அனைவ ருக்கும் இருக்கிறது.

