தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி எஸ். முருகன் கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் கலையரசி ஐஏஎஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியுள்ளதாவது,
அன்புடையீர் வணக்கம்,
முத்தமிழில் ஒன்றும் நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் முக்கியமானதுமான நாடகக்கலை சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்கள் வந்த பின்னும் இன்னும் நாடகக்கலையை அழியாமல் சில ஆயிரம் குடும்பங்கள் பாதுகாத்து வருகின்றன. அவர்களை பாதுகாப்பது என்பது நாடகக்கலையையே பாதுகாப்பது போன்றதாகும். இந்த பேரிடர் காலத்தில் அழிந்து வரும் நமது பாரம்பரிய கலையான நாடகக் கலையை மீட்டெடுக்க நாடகக் கலைஞர்களை காப்பாற்றுவது அவசியம். தமிழ் நாடு முழுக்க நாடக நடிகர்களும் நாடகக் கலைஞர்களும் கடும் சிரமத்தில் உள்ளனர். அவர்களுக்கு உடனடி உதவித்தொகை வழங்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியை கலைகளின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழி. அதனை உறுதிப்படுத்தி தமிழகம் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாடகக்கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்து நமது பாரம்பரிய கலையை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு சில யோசனைகள் :-
50 நாள் வேலை உறுதி திட்டம் – அரசு சார்பில் நாடகத்துக்காகவே பிரத்யேகமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் ஒவ்வொரு நாடகக்குழுவுக்கும் வாய்ப்பு தரலாம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியான திட்டமாக இருக்கும். நமது பாரம்பரிய நாடகக்கலை அழியாமல் பாதுகாக்கப்படும். இதில் வரும் விளம்பர வருவாயும் அரசுக்கு சேரும். தொடக்கத்தில் லாபம் தராவிட்டாலும் நேர்த்தியான நாடகங்கள் மூலம் மக்களை நமது சேனல் பக்கம் ஈர்க்கலாம். சில மாதங்களில் விளம்பர வருவாய் கிடைக்கும். தொடக்க காலத்தில் அரசின் விளம்பரங்களை கூட அதில் ஒளிபரப்பலாம்.
பொன்னியின் செல்வன் நாடகம் சென்னையில் போடப்பட்ட போது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல நேர்த்தியாக நாடகங்களை இயற்றும் குழுக்களை ஊக்கப்படுத்தலாம். இந்த நாடகங்களை அரசு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பலாம்.
ஒவ்வொரு நாடகக்குழுவுக்குமே தனி யூடியூப் சேனல் தொடங்க வழி காட்டலாம்.
தமிழ் திரைப்படங்களில் நாடக நடிகர்களை அதிக அளவில் பயன்படுத்தும் படங்களுக்கு சிறப்பு சலுகைகள், மானியம் அறிவிக்கலாம்.
குறிப்பாக நாடகக் கலைஞர்களை பயன்படுத்தும் படக்குழுவின் படப்பிடிப்புக்கு எளிதில் அனுமதி வழங்கலாம்.
நசிந்துக்கொண்டு இருக்கும் நாடகத்துறைக்கு இந்த யோசனைகள் நிச்சயம் நலம் தரும் என்றும் நம்புகிறேன். எனவே இவற்றில் நடைமுறைக்கு சாத்தியமான யோசனைகளை உடனடியாக நிறைவேற்றி ஆயிரக்கணக்கான நாடகக்கலைஞர்கள் குடும்பங்களின் வாழ்வாதார சிக்கலை தீர்த்து வைத்து உதவுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.