Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹாலிவுட் செல்வதற்கு முன் டி.எஸ்.கேவை பாராட்டிய தனுஷ்..

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தார் டி.எஸ்.கே. தற்போது ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் காம்பினேஷனில் அடங்காதே, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுடன் ஒரு படம், ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படம் என அரை டஜன் படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் எதிர்பாராத சர்ப்ரைஸாக நடிகர் தனுஷிடம் இருந்து டிஎஸ்கேவுக்கு அழைப்பு வந்தது. இன்னும் அதுகுறித்த பிரமிப்பு மாறாத நிலையில் இதுபற்றி டி.எஸ்.கே. கூறும்போது, “சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தில் ஜீவாவுடன் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருநாள் அண்ணன் ரோபோ சங்கரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அருகில் தனுஷ் இருப்பதாகவும் அவர் உன்னுடன் பேச விரும்புகிறார் என்றும் கூறினார் ரோபோ சங்கர். என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்து பேசிய தனுஷ், என்னுடைய நிகழ்ச்சிகள், நடிப்பு என அனைத்தையும் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் ரொம்பவே பாசிடிவாக இருப்பதாகவும் தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறி ஊக்கப்படுத்தினார். மேலும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும் அன்புடன் விசாரித்தார். அதுமட்டுமல்ல விரைவில் நாம் நேரில் சந்திப்போம் என்றும் கூறினார்.

தேசிய விருது பெற்ற நடிகரான அவர் என்னை அழைத்து பேசியதே, எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்து போல இருக்கிறது. இப்படி எளிமையான மனிதராக இருப்பதால் தான் அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் தனுஷ். இந்த உரையாடல் அவர் தனது ஹாலிவுட் படத்திற்காக வெளிநாடு செல்வதற்கு சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்தநிலையில் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்த இன்னொரு செய்தியும் எனது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்ததும் அவரை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன்” என கூறுகிறார் டி.எஸ்.கே அநேகமாக கூடிய விரைவில் தனுஷ் படத்தில் டி.எஸ்.கே. நடிக்கிறார் என அறிவிப்பு வந்தாலும் அதுகுறித்து ஆச்சர்யப்பட தேவையில்லை.

இந்த மகிழ்ச்சியுடன் தற்போது இன்னொரு கவுரவமும் டி.எஸ்.கேவை தேடி வந்துள்ளது. ஆம்.. சர்வதேச தமிழ் பல்கலை கழகம் டி.எஸ்.கேவுக்கும் அவரது நண்பரான நடிகர் அசாருக்கும் சிறந்த சமூக செயல்பாட்டாளர் என்கிற பிரிவில் டாக்டரேட் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஒரு நடிகர் என்பதை தாண்டி சமூக செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர் தான் டி.எஸ்.கே.. குறிப்பாக சென்னை வெள்ளம், வர்தா மற்றும் கஜா புயல் தாக்குதல் போன்ற பேரிடர் காலகட்டங்களில் தனது நண்பர்கள் வட்டாரத்தை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை செய்துள்ளார் டி.எஸ்.கே..

தற்போது டாக்டரேட் பட்டம் பெற்றது குறித்து அவர் கூறும்போது, “எனது சமூக சேவைக்கான ஒரு அங்கீகாரமாகத்தான் இதை கருதுகிறேன். முன்பை விட இன்னும் சமூகத்தின் மீதான பொறுப்பு அதிகரித்துள்ளது” என பெருமிதத்துடன் கூறுகிறார் டி.எஸ்.கே.

Related posts

Announcement of Agsentertainment Production 22 On Monday 4th October

Jai Chandran

 “AVM’s Masterclass-2022” programme in Avichi College

Jai Chandran

Dunki’ becomes the first choice for families

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend