படம்: மக்கள் தலைவா
நடிப்பு: ரவி மரியா, அக்ஷரா விஜய், கஞ்சா கருப்பு, ராதாரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், கவிதாலயா சரவணன், அக்னி எஸ் வருண்
தயாரிப்பு: கவிதாலயா சரவணன்
இசை: துளசி ராமன்
ஒளிப்பதிவு: கார்த்திக் எஸ் நாயர்
இயக்கம்: ராம் தேவ்
பி ஆர் ஓ : வேலு
கதை: ஊர் பக்கத்தில் பிரபலமாவதற்காக சின்னச் சின்ன போராட்டங்களில் ஈடுபடுகிறார் ரவி மரியா. அதை கண்காணிக்கும் தொழிலதிபர் ராதாரவி அவரை அழைத்து அரசியல் கட்சி தொடங்கச் சொல்லி அதற்கு பைனான்ஸ் செய்கிறார். தொடங்கிய சில நாட்களிலேயே சமூக வலைதளங்கள் மூலம் ரீல்ஸ் போட்டு ரவி மரியாவை, ராதாரவி தமிழ்நாடு முழுக்க பிரபலமடையச் செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரை தேர்தலில் போட்டியிடச் செய்து அவர் ஜெயிப்பதற்கான அத்தனை வேலைகளும் செய்கிறார். இறுதியில் நடந்தது என்ன என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
மக்கள் தலைவா படம் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கதை இதில் அமைக்கப்பட்ட கிளைமாக்ஸ்சும் அப்போதே அமைக்கப்பட்டது என்று இயக்குனர் ராம்தேவ் கூறினாலும் அது இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்படியான கதையாக அமைந்திருப்பது தான் அனைவருக்கும் ஷாக்கான விஷயமாக அமைந்திருக்கிறது.
காமெடி வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த ரவி மரியா இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோ என்றால் ஆக்சன் அடிதடி காதல் என்றில்லாமல் கதையின் நாயகனாக, ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
என்னதான் ஹீரோவாக நடித்திருந்தாலும் ரவி மரியா தனது காமெடி பஞ்ச் அவ்வப்போது பேசி கலகலபபூட்டுவதுடன், மேடைகளில் ஒரு அரசியல்வாதியாகவே மாறி மைக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போதும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அளிக்கும்போதும் சமீபத்தில் வெற்றி அடைந்த ஒரு பிரபல நடிகரை கண்முன் நிறுத்துவதை மறுக்க முடியாது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தி ரீல்ஸ் காட்சிகளாக போட்டு மக்களை கவர்வது தற்போதைய ரீல்ஸ் ஆட்சியின் கோலத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
ராதாரவி ஒரு கார்ப்பரேட் தொழில் அதிபராக வருகிறார் அவர் தான் முதல்வர் வேட்பாளரை ஆட்டிப் படைக்கிறார் என்று படத்தில் காட்டும்போது, யாரோ ஒரு லாட்டரி அதிபர் ஞாபகம்தான் வருகிறது. கார்ப்பரேட்கள் நினைத்தால் ஒரு முதல்வரை உருவாக்கவும் முடியும் அவரை காணாமல் போகவும் செய்ய முடியும் என்பது எவ்வளவு நிதர்சமான உண்மை என்பதை நறுக்கு தெரித்தார் போல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
கஞ்சா கருப்பு, ரவி மரியாவின் நண்பராக வந்து தன் பாணியில் பேசி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முத்திரை நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதேபோல் ரவி மரியாவின் நண்பராக வரும் அக்னி எஸ் வருண் புதுமுகமாக அறிமுகமாகியிருந்தாலும் தாக்குப் பிடித்திருக்கிறார்.
படத்தை கவிதாலயா சரவணன் தயாரித்திருப்பதுடன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்.

இயக்குனர் ராம்தேவ் படத்தை எதை நினைத்து எடுத்தாரோ தெரியவில்லை ஆனால் இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டும் படமாக உருவாக்கி இருக்கிறார் என்பது மட்டும் உறுதி. இந்த படம் எஸ் ஏ சி டீமிலிருந்துதான் உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அது அவர்களுக்கு ரிவீட் அடிக்கும் படமாக அமைந்திருக்கிறது.
துளசி ராமன் இசை அமைத்திருக்கிறார் முட்டா முட்டா முட்டா ஊருதான்.. பாடல் மக்களின் அறியாமைக்கு கன்னத்தில் அறையும் பாடலாக அமைந்திருக்கிறது.
கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு கலர் புல்.
மக்கள் தலைவா – ரீல்ஸ் ஆட்சியை மரண கிழி கிழித்தி ருக்கிறது.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com
