காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவர் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கமலஹாசன், விஜயகாந்த் போன்ற பிரபல நடிகர்களின் குரல்கள் போல் மிமிக்கிரி செயது பிரபலமானார்.
பின்னர் சினிமாவில் நடிக்க வந்தார். தர்மசக்கரம், படையப்பா, மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குறுகிய காலத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சமீபத்தில் கூட அவர் நடித்த சொட்ட சொட்ட நனையுது என்ற படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் ரோபோ சங்கர் உடல் நிலை நேற்று முன்தினம் மீண்டும் பாதிக்கப்பட்டது. அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதுடன் கல்லீரல் தொற்றும் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி வியாழன் இரவு (செப்டம்பர் 18) ஒன்பது மணி அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா என்ற படத்தின் தொடக்க விழாவில் ரோபோ சங்கர் கலந்துகொண்டபோது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மறைந்த ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.
மதுரையை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ போன்று வேடமிட்டு நடனம் ஆடுவார். இதையடுத்து ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.

மேலும் ரோபோ சங்கர் கமலின் தீவிர ரசிகர். அவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசையாக இருந்தது. அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் மறைந்து விட்டார்.
ரோபோ சங்கர் மறைவு செய்தி தமிழ் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ரோபோ சங்கர் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.
