படம்: படையாண்ட மாவீரா
நடிப்பு: வா கவுதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா
தயாரிப்பு:நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி
இசை: ஜிவி பிரகாஷ்
(பாடல்)
பாடல்கள்: வைரமுத்து
பின்னணி இசை: சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
இயக்கம்: வா கவுதமன்
பி ஆர் ஓ: நிகில் முருகன்
டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கை கதை ஒட்டி அவரது புகழ் பாடும் படமாக உருவாகி உள்ளது படையாண்ட மாவீரா..
அரியலூர் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்கும் தொழிற்சாலையை தடுப்பதற்காக அங்குள்ள ஏழை மக்களின் இடத்தை அபகரிக்கிறார்கள். அதை எதிர்த்து காடுவெட்டி குரு குரல் கொடுக்கிறார். தான் வாழும் பகுதியில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்காக எப்படி எல்லாம் போராடினார், அவர் வாழ்க்கையில் சேர்த்த சொத்து என்ன? அவரை மக்கள் எப்படி கொண்டாடினார்கள் என்று கதை செல்கிறது.
காடுவெட்டி குரு பாத்திரத்தில் வா கவுதமன் நடித்திருப்பதுடன் படத்தையும் இயக்கி இருக்கிறார். என்னதான் காடுவெட்டி குரு கதையாக இருந்தாலும் ஒரு சில உண்மை சம்பவங்கள் மற்றபடி புனையப்பட்ட கதையாகவே இப்படம் உருவாகி இருக்கிறது.
குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவுதமன் உணர்ச்சிப் பெருக்குடன் நடித்திருக்கிறார்.
ஏழை மக்களுக்கு எதிராக போலீசார் நடத்தும் அராஜகத்தை தட்டிக் கேட்பதும், சீரழிக்கப்படும் பெண்களுக்கான நியாயத்தை தட்டி கேட்க சரியான தண்டனை தருவதன் மூலமும் காட்சிகளில் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இது ஒரு சாதிய அடையாளங்ககளுடன் சொல்லப்பட்டிருந்தாலும் கதை என்னவோ பொதுவான ஒரு கதையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட பரம்பரையும், ஒதுக்கப்பட்ட சமூகத்தினரும் ஒன்றாகவே சகோதர பாசத்துடன் பழகினார்கள் என்ற காட்சிகளை அமைத்து இரு பிரிவினருக்குமான அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்திருக்கிறார்.
ஆனால் சினிமாவால் அந்த சர்ச்சைகள் முடிவுக்கு வருமா என்பதெல்லாம் சந்தேகம் தான்.
கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா நடித்திருக்கிறார். தொடக்கத்தில் சில காட்சிகள், இடையில் சில காட்சிகள் என்று தலை காட்டிவிட்டு செல்கிறார்.
கவுதமனின் தந்தையாக சமுத்திரக்கனி, தாயாக சரண்யா நடித்துள்ளனர்.
மேலும் இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா ஆகியோரு ம் நடித்திருக்கிறார்கள்.
நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் பளிச்சென ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
கவிஞர் வைரமுத்துவின் துடிப்பான பாடல் வரிகள், ஜீவி பிரகாஷின் இசையில் மூழ்கி துள்ளி குதித்திருக்கிறது.
சாம் சி. எஸ். பின்னணி இசை கை வலிக்க வலிக்க காது ஜவ்வு கிழியும் அளவுக்கு தெறிக்கிறது.
இயக்குனர் கவுதமன் ஏதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே காட்சிகளில் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறார் குருவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு அரசியல் ரீதியாக நடந்த துரோகங்கள் என்று வெளி உலகில் பேசப்படும் எந்த எதிர்மறை கருத்துக்களைப் பற்றி வாய் திறக்கவில்லை.
படையாண்ட மாவீரா – மஞ்சள் சட்டை போர் வீரன்.

Review by
Jayachandhiran. K.
Trendingcinemasnow.com
