படம்: இறுதிப் பக்கம்
நடிப்பு: ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா சீனிவாசன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ், சுபதி ராஜ்,
தயாரிப்பு: சிலம்பரசன் (கிருபாகர்), செல்வி வெங்கடாசலம்
இசை: ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு: பிரவின் பாலு
இயக்கம்: மனோ வெ.கண்ணதாசன்
பி ஆர் ஒ : சக்தி சரவணன்
இளம் பெண் இயல் (அம்ருதா) ஆங்கில கதைகள் எழுதுவதில் திறமை வாய்ந்தவர். தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு பெயர் கொண்ட கதாபாத்திரங்களாக வடித்து அதை புத்தகமாக எழுதுகிறார். அவரது கதைக்கு ரசிகன் ஆகும் பிரசாந்த் (விக்னேஷ் சண்முகம்) காதலும் கொள்கிறான். அவளும் அவனுடன் காதல் கொள்கிறாள். வாழ்வில் அனுபவித்ததைத்தான் எதார்த்தமான கதையாக எழுத முடியும் என்ற பாலிசி கொண்டவள் இயல். ஆண், பெண் உறவு பற்றி அவள் எழுதும் கதையும் நிஜ அனுபவத்தில் எழுதியதாக கூற அதை ஹீரோ ஏற்க மறுப்பதுடன் வேறு ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்த உன்னுடன் எப்படி நான் வாழ முடியும் என்று காதலை முறித்துக்கொள்வதாக தெரிவிக்கிறான். அவளோ, “செக்ஸ் என்பது உடல் சம்பந்தப்பட்டது, காதல் மனம் சம்பந்தபட்டது. நான் உன்னை காதலிக்கிறேன்” என்னை ஏற்றுக்கொள்” என்று மன்றாடுறாள். அதை ஏற்காமல் ஹீரோ விலகி செல்கிறான். இந்நிலையில் இயலை ஒருவன் கழுத்தை இறுக்கிகொலை செய்கிறான், போலீஸுக்கு தகவல் தெரியவர அவர்கள் விசாரணையை முடுக்கி விடுகின்றனர். இயலின் காதலன், அவளுடன் லிவின் டு கெதர் வாழ்க்கை நடத்திய மிதன் (ஸ்ரீராஜ்) மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்கிறது. இந்த விசாரணையில் ஜெனிபர் (கிரிஜா) என்ற பெண் அதிகாரியும் போலீசுக்கு உதவுகிறார். பல கோணங்களில் விசாரித்தும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. ஒரு கட்டத்தில் ஜெனிபர் மீது குற்றம் திரும்புகிறது. சிறுவயதில் ஜெனிபரும், இயலும் ஒன்றாக ஆசிரமத்தில் படித்தவர்கள் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதல் பிற்காலத்தில் கொலை செய்யும் அளவுக்கு மோதலாக முற்றுகிறது என போலீஸ் சொல்ல அதுவும் ஒரு கட்டத்தில் இல்லை என்றாகி விடுகிறது. அப்படியென்றால் இயலை கொலை செய்தது யார் என்பதற்கு எதிர்பார்க்காத விடை அளித்து அசத்துகிறது கிளைமாக்ஸ்.
எந்த சமரசமும் இல்லாமல் சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவல் ஒன்று திரைப்படமாக உருவானால் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இறுதி பக்கம் சரியான உதாரணம்.
இயல் என்ற பாத்திரத்தில் அம்ருதா நடித்திருக்கிறார். இப்படியொரு பாத்திரத்தை ஏற்க முதலில் துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் அம்ருதாவிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.
தான் எழுதும் நாவல்களில் வரும் பாத்திரங்கள் தன் வாழ்வில் சம்பந்தபட்ட நிஜ மனிதர்கள் என்பதை காதலனிடம் சொல்லும் அம்ருதா ஆண், பெண் உறவுபற்றிய அனுபவத்தை தத்ருபமாக எழுதவேண்டும் என்பதற்காக பல ஆண்களுடன் அவர் உறவு கொள்வதுபோல் நடித்திருப்பது விவாதத்தப்பொருளாகிறது
செக்ஸ் வேறு, காதல் வேறு. நான் வேறு ஆண்களிடம் பழகினாலும் அது உடல் சம்பந்தப்ட்டது ஆனால் மனதில் உன்னைத்தான் காதலிக்கிறேன் என்று காதலன் விக்னேஷை சமரசம் செய்ய முயற்சி செய்யும் அம்ருதா வித்தியாசப்படுகிறார்.
காதலின் உச்சம்தான் காமம் அதை வேறுபடுத்தி பார்ப்பது சரியல்ல, நீ என்னை மறந்துவிடு என்று அம்ருதாவிடம் விக்னேஷ் சொல்வது நியாமாகவே தெரிகிறது.
”எதிர்வீட்டில் உள்ளவரை பார்க்க வந்தேன் அவர்கள் வெளியில் சென்றிருக்கிறார்கள் அவர்கள் வரும்வரை உங்கள் வீட்டில் இருக்கட்டுமா?” என்று ஒரு நபர் கேட்டதும் தனியாக இருக்கும் அம்ருதா அவரை வீட்டுக்குள் வந்து அமர சம்மதிக்கும்போது ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. அதற்கேற்ப அம்ருதாவை அந்த நபர் மறைந்திருந்து கழுத்தை நெறித்து கொல்வது பெரும் அதிர்ச்சி.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலசந்திரன் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இயல்பாக நடித்து கவர்கிறார். தன்னுடனே இருந்து உதவி செய்யும் கிரிஜா ஹரிக்கும் கொலையுண்ட அம்ருதாவுக்கும் இருக்கும் தொடர்பையும், பழிவாங்கும் போக்கையும் கண்டுபிடித்து விசாரிப்பது திரைக்கதையில் வைக்கப்பட்டிருக்கும் அழகான டிவிஸ்ட்.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஸ்ரீராஜ், சுபதி ராஜ் ஆகியோரின் நடிப்பும் கதையின் ரகசியத்தை கிளைமாக்ஸ்வரை கட்டிக்காக்க உதவுகிறது.
புது இயக்குனர் மனோ வெ கண்ணதாசன் படத்தின் திரைக்கதையை எதார்த்தம் மேலிட அமைத்து அதில் சஸ்பென்ஸை முடித்துவைத்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்பது சுவராஸ்யத்தை கூட்டுகிறது.
விருதுகளை தட்டி வரும் தகுதி பட வரிசையில் இறுதிப்பக்கம் நிச்சயம் இடம்பிடிக்கும்.
பிரவின் பாலுவின் கேமிரா, ஜோன்ஸ் ரூபர்ட் இசை, ராம் பாண்டியன் எடிட்டிங் மூன்றும் கதையின் போக்கை சிதைக்காமல் வார்த்திருக்கிறது.
இறுதிப் பக்கம் – டெல்லி வரை பேசும்.

