படம் :வனம்
நடிப்பு : வெற்றி, ஸ்மிருத்தி வெங்கட், அனுசித்ரா, வேல ராமமுர்த்தி, அழகம் பெருமாள், பிரதிப், தேசிங்கு ராஜா, ஜே. பி. அலெக்ஸ்
தயாரிப்பு : கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி. அமலன்,
இசை :ரான் ஈத்தன்
ஒளிப்பதிவு :விக்ரம் மோகன்
இயக்கம் : ஸ்ரீ கண்டன் ஆனந்த்
ஜமீன்தார் வானாதிராயன் (வேல ராமமூர்த்தி) ஆண்மையில்லாதவராக இருந்தாலும் பெண்களை சீரழிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மலைவாழ் பகுதியில் அழகு பெண் மல்லி (அனுசித்ரா) உள்ளிட்ட குறைந்த மக்களே வசிக்கின்றனர். வாரிசில்லாத தனக்கு தன் பெயர் நிலைத்திருக்க மலைவாழ் மக்கள் வாழும் இடத்தில் அவர்களை விரட்டிவிட்டு ஒரு கல்வி கூடம் கட்ட எண்ணுகிறார் வானாதிராயன். ஜமீன்தாரின் கண்ணில் ஒரு நாள் மல்லி பட அவளை நாசம் செய்து கொல்கிறார். தன்னை சாகடித்த ஜமீன்தாரை மறுஜென்மம் எடுத்து கொல்ல சபதம் ஏற்கிறாள் மல்லி. அவளது சபதம் வென்றதா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
கதையை எப்படி ஆர்வம் தூண்டும் வகையில் எழுதி இருக்கிறார்களோ அதே ஆர்வத்துடன் நட்சத்திரங்களும் படத்தில் ஆர்வம் பொங்க நடித்திருக்கிறார்கள்.
எங்கும் மிகை இல்லாமல் எங்கும் குறையில்லாமல் காட்சிகள் மிக எதார்த்தமாக படமாகி இருக்கிறது.
ஹீரோ வெற்றி ஓவியக் கல்லூரி மாணவராக வருகிறார். நிதானமான நடிப்பால் காட்சிகளில் உள்ள சஸ்பென்ஸ் உடையாமல் பார்த்துக்கொள்கிறார்.
நண்பர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆர்வத்தை தூண்டுகிறது. ஜமீன்தாரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படித்து அதை எழுதிய கதாசிரியரை தேடி சென்று ரகசியமாக விசாரித்து உண்மைகளை கண்டறிவதும் அப்போது மல்லி, ஜமீன்தார் இடையே நடந்த மோதலை பற்றி அறிந்துக்கொண்டு மறுஜென்மத்தில் மல்லி யாராக பிறந்திருக்கிறார், ஜமீன்தார் யாராக பிறந்திருக்கிறார் என்ற மர்மங்கள் அவிழும்போது அடுத்தடுத்து ஆச்சரியங்களை அள்ளி கொட்டியிருக்கிறார் இயக்குனர்.
ஸ்மிருத்தி வெங்கட், அனுசித்ரா, வேல ராமமுர்த்தி, அழகம் பெருமாள், பிரதிப், தேசிங்கு ராஜா, ஜே. பி. அலெக்ஸ் நடிப்பில் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் மட்டுமல்ல அப்போது நடக்கும் மோதல் காட்சியை படமாக்கி இருக்கும் விதமும் மிகவும் சாமர்த்தியம். இதில் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகனின் பணி பாராட்டுகளை பெறுகிறது அதேபோல் கிராபிக்ஸ் பணிகளும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
இயக்குனர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், முற்பிறவி, மறுபிறவி இரண்டையும் சுவாரஸ்யாமான திரைக்கதையுடன் அமைத்து படத்தை நச்சென இயக்கி உள்ளார்.
வனம்- கவர்திழுக்கும்.
