முதல்வர், அமைச்சர்கள் போன்ற விஐ பிக்கள் சாலைகளில் செல்லும் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு வந்தனர். இதில் பெண் போலீஸாரும் சாலை பாதுகாப்பில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருந்தது. தற்போது சாலை பந்தோபஸ்து பணியில் பெண் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து பெண் போலீஸாரை சாலை பந்தோபஸ்து பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று போலீஸ் நிலையங்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் மிக மிக அவசரம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியாதாவது:
பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது…அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது… ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம்.
ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரு வெற்றியைத் தந்தது.
திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.
பெண்போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஸ்டாலின் க்கும்… மரியாதைக்குரிய டிஜிபி -க்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், மற்றும்
படத்தை வெளியிட்ட #லிப்ரா ரவீந்தர் சந்திர சேகரன், இணைந்து தயாரித்த #குங்ஃபூஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பி ஆர் ஓ A. ஜான் அனைவருக்கும் நன்றிகள்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் “மிகமிக அவசரம்” படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.
இவ்வாறு தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறி உள்ளார்.
