படம்: ஸ்மைல் மேன்
நடிப்பு: சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மகாராஜன்
தயாரிப்பு: சலில்தாஸ்அனீஸ்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு: விக்ரம் மோகன்
இயக்கம்: ஷியாம் பிரவீன்
பி ஆர் ஓ: சதீஷ், சிவா (AIM)
நகரில் வாய் கிழிக்கப்பட்டு சிரித்த நிலையில் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு ஆட்களை கொன்று அவர்கள் வாயை கிழித்து சிரித்தபடி இருக்கும் நிலையில் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான் என்ற நிலையில் மீண்டும் அதே பாணியில் கொலை நடப்பதால் சி பி சி ஐ டி போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த கொலையில் துப்பு துலங்க உதவும்படி இளம் போலீஸ் அதிகாரி அரவிந்த்(ஸ்ரீகுமார்) சீனியர் அதிகாரி சிதம்பரம் நெடுமாறனிடம் ( சரத்குமார்) கேட்கிறார். அவரும் உதவுவதாக கூறுகிறார். ஆனால் இந்த கொலை ஒன்றோடு நிற்காது அடுத்தடுத்து தொடரும் என்றும் கூறுகிறார். இதனால் இளம் அதிகாரி அதிர்ச்சி அடைகிறார். ஒரு கட்டத்தில் சிதம்பரம் மீது சந்தேகம் கொள்கிறார். உண்மையில் இந்த கொலைகளை செய்வது யார்? எதற்காக இந்த கொலைகள் நடக்கின்றன? என்பதற்கெல்லாம் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
சைக்கோ திரில்லர் கதை என்பது வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி விடுகிறது அந்த வரிசையில் சைக்கோ கொலைகாரன் படமாக வந்திருக்கிறது ஸ்மைல் மேன்.
கொலை செய்துவிட்டு வாயை கிழித்து சிரிப்பது போல் உடலை . விட்டு செல்லும் கொலைகாரன் எப்படி இருப்பான் என்பதை தொடக்க காட்சியில் யூகிக்க முடியவில்லை. காரணம் அதற்கான எந்த. க்ளூவும் தொடக்கம் முதல் கொலைகாரன் யார் என்பதை காட்டும் வரை சொல்லப்படவில்லை .
சரத்குமார் மீது சந்தேகம் வரும்படியாக காட்சிகளை அமைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயன்று இருக்கிறார்கள். அது ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது.
சரத்குமார் திடீரென்று குமாஸ்தா ஒருவரை நேரில் சந்தித்து இவர்களை எல்லாம் பின் தொடர் வேண்டும் என்று கேட்பதும் அடுத்தடுத்த நாட்களில் அந்த நபர்கள் கொல்லப்படுவதும் சஸ்பென்ஸ் என்றாலும் இந்த கொலைகள் எதற்கு நடக்கிறது என்பதற்கு சரியான விடை இல்லை.
சரத்குமார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வந்தாலும் கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருப்பதால் சண்டைக் காட்சிகளில் அவரால் ட,ஃப் பைட் கொடுக்க முடிகிறது. அவருக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக ஒரு கூடுதல் விஷயத்தையும் வைத்து காய் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அவருக்கு எப்போது ஞாபகம் வருகிறது எப்போது ஞாபக மறதி ஏற்படுகிறது என்பதெல்லாம் லாஜிக் இல்லாமல் இருக்கிறது.
இனியா, சிஜா ரோஸ், சுரேஷ் மேனன் போன்றவர்கள் சஸ்பென்சுக்கு உதவுகின்றனர்.
போலீசில் நடத்தப்படும் சில போலி என்கவுண்டர் பற்றியும் இந்த படத்தில் தோலுரித்திருப்பது சில போலீசாரின் சுயநலத்தை படம் பிடித்து காட்டுகிறது.
விக்ரம் மேனன் இருள் சூழ்ந்த மூடில் காட்சிகளை படமாக்கி சஸ்பென்ஸ் ஓபன் ஆகாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் இன்னமும் கவனம் செலுத்திஇருந்தால் காட்சிகள் கூடுதல் கவனம் பெற்று இருக்கும் அடுத்தடுத்து ஒரே பாணி காட்சி என்பதால் தொய்வு ஏற்படுகிறது. இன்னும் கூட ட்ரிம் செய்தால் படத்தில் வேகம் அதிகரிக்கும். இதெல்லாம் இயக்குனர் ஷியாம் பிரவீன் கையில்தான் இருக்கிறது.
ஸ்மைல் மேன் -மற்றொரு சைக்கோ கொலைகாரன் கதை..

