படம்: ராஜ புத்திரன்
நடிப்பு: பிரபு, வெற்றி, கிருஷ்ண பிரியா, மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர் வி உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், தங்கதுரை
தயாரிப்பு: கே. எம். சபி
இசை: எஐஎஸ் . நௌஃபல் ராஜா
ஒளிப்பதிவு: ஆலிவர் டெனி
இயக்கம்: மகா கந்தன்
பி ஆர் ஓ: டைமண்ட் பாபு
90 காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ராஜ புத்திரன். செல்லையா (பிரபு) மகன் பட்டா (வெற்றி) மீது பாசம் பொழிகிறார். அதேபோல் தந்தை மீது பட்டாவுக்கும் அளவு கடந்த அன்பு. போதிய அளவு படிக்காத நிலையில் பட்டா, வில்லன் லிங்கா செய்யும் சட்டவிரோத பண பரிமாற்ற வேலையில் சேர்கிறான். அவர்கள் தரும் பணத்தை பட்டாவிடமிருந்து ஒருவன் திருடி விட அதற்கு ஈடாக தங்களது வீட்டு பத்திரத்தை செல்லையா , பட்டா தருகின்றனர். ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த பணத்தை யார் திருடியது என்பதை பட்டா கண்டுபிடிக்கி றான். இதற்கிடையில் இளம் பெண் பூச்செண்டு (கிருஷ்ண பிரியா) மீது பட்டா காதல் கொள்கிறான். வீட்டை அடமானம் பெற்ற லிங்கா செல்லையா வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறான். இந்த மோதலில் எதிர்பாராத சம்பவங்கள் செல்லையா, பட்டா குடும்பத்தில் நடக்கிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
சின்னதம்பி படத்தில் அப்பாவிபோல் பிரபு எப்படி நடித்தாரோ அப்படி ஒரு மாறுபட்ட நடிப்பை செல்லையா என்ற கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரபு. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் பிரபுவை பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
மகன் வெற்றி மீது பிரபு காட்டும் பாசத்தில் அன்பு வழிந்தோடுகிறது.
ஒரு குத்தாட்டம், ஒரு சண்டை காட்சி என அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் செய்திருப்பது அவர் இளைய திலகம் அல்ல சீனியர் திலகம்
ஆகிவிட்டார்
என்று எண்ண வைக்கிறது.
எட்டு தோட்டாக்கள் வெற்றியா இது என்று கேட்கும் அளவுக்கு நடிப்பில் 100% மாறுபாட்டை காட்டியிருக்கிறார். உடல் மொழி, காதல் காட்சி, சண்டைக் காட்சி, வசனக்காட்சி என அத்தனையிலும் சலவைக்க போட்டு எடுத்தது போல் ஒரு புது வெற்றியாக பளிச்சிடுகிறார்.

கதாநாயகி கிருஷ்ண பிரியா கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் நடிப்பில் ஒரு ரேவதியை கண் முன் நிறுத்துகிறார். வெற்றிக்கும், கிருஷ்ண பிரியாவுக்கும் காதல் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
வட்டி வசூலிக்கும் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் லேசான வில்லத்தனம் காட்ட , சட்ட விரோத பணம் பரிமாற்றம் செய்யும் லிங்காவாக நடித்திருக்கும் கன்னட நடிகர் கோமல் குமார் தமிழுக்கு கிடைத்த புது வில்லன்.
இமான் அண்ணாச்சி, தங்கதுரை நகைச்சுவைக்கு பயன்பட்டிருக்கிறார்கள். மீசை லிவிங்ஸ்டன், ஆர்வி உதயகுமார் இருவரின் கதாபாத்திரங்கள் சஸ்பென்சுக்கு பயன்பட்டிக்கிறது.
கே. எம். சபி தயாரித்திருக்கிறார். புது இயக்குனர் மகா கந்தன் ஒரு நல்ல திரை கதையுடன் தந்தை மகன் பாசத்துடன் கூடிய கதையை வெகு நேர்த்தியாக இயக்கி ரசிகர்களை கவர்கிறார். 90 கால கட்ட கதைகளை மீண்டும் காண முடியாதா என்ற ஏக்கம் ராஜபுத்திரன் படத்தில் தீர்ந்திருக்கிறது.
எஐஎஸ் . நௌஃபல் ராஜா இசை , ராஜாவின் சாயலில் பூங்காற்றுடன் சேர்ந்த புல்லாங்குழல் இசையாக மனதை வருடுகிறது.
தமிழுக்கு ஒன்று, தமிழர்க்கு ஒன்று என்ற வைரமுத்துவின் வரிகள் சினிமாவில் இன்னும் தமிழ் சாகவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.
ஆலிவர் டெனி கேமரா கிராமத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சியும் அசத்தலாக படமாகி இருக்கிறது.
ராஜபுத்திரன் – குடும்பத்துடன் ரசிக்க ஏற்ற படம்.

