பாகிஸ்தானில் பொருளாதார. பின்னடைவு காரணமாக இம்ரான்கான் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக குரல் எழுந்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க கடைசிவரை பல்வேறு யுக்திகளை அவர் கையாண்டார். ஆனாலும் எதிர்கட்சிகள் விடாப்பிடியாக இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்தன. ஆனால் அந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். அதேசமயம் பாகிஸ்தான் நாடாளு மன்றத்தை கலைக்க. இம்ரான்கான் சிபாரிசு செய்தார். அதை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும், இம்ரான் கான் அரசு, மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது., கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதால் அரசின் பலம் 164 ஆக குறைந்தது..
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி நேற்று காலை நாடாளுமன்றம் கூடியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி ஷாமக் மூத்குரேஷி பேசினார்கள்.
பின்னர் சபையை பகல் 12.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆசாத் குவைசர் தெரிவித்தார். பின்னர்
இப்தார் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை இரவு 7.30 மணிவரை ஒத்திவைப்பதாக மீண்டும் சபாநாயகர் அறிவித்தார். நோன்பு திறப்புக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது உடனடியாக இரவு 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு இரவு தொழுகைக்கு பிறகு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு நடக்குமா ? நடக்காதா ? , எனற குழப்பமான நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை தாங்கினார். அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை தொடங்கினார். நள்ளிரவு 1.30 மணிக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது. 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சியை காப்பாற்ற இம்ரான்கானுக்கு 172 பேரின் ஆதரவு தேவை. அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்படி இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார்.
இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததையடுத்து
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.