தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சக தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்.
நமது வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச்செய்ய, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற நமது சங்க தேர்தலில், சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்த பதவி ஏற்பு விழாவிற்கு பெருந்திரளாக வந்திருந்து நம் ஒற்றுமையை நிலைநாட்டிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது வி,பி,எப் கட்டணம் சம்பந்தமாக நடந்துள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி தயாரிப்பாளர்கள் வி.பி.எப். கட்டணம் கட்ட இயலாது என்ற நமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டு டிஜிட்டல் புரவைடிங் நிறுவனங்களுக்கு நமது சங்கம் சார்பாக கடிதம் எழுதி உள்ளோம்.
மேலும் திங்கட்கிழமை நடைபெற உள்ள செயற்குழுவில் வி.பி.எப். கட்டணம் குறித்து விரிவாக ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்ததாக நமது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் நிரந்தரமானது என்று குறிப்பிட்டு நம் சங்கத்தை பெருமைப் படுத்தியிருப்பதற்காக அமைச்சருக்கு நமது தயாரிப்ப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொருவரும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒற்றுமையே உயர்வு. அப்படிப்பட்ட நமது சங்கத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் . சங்க நலனிற்கும். சக தயாரிப்பாளர்களின் நலனிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் சரி, யார் செயல்பட்டாலும் சரி அவர்கள் மீது சங்க விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நிர்வாகம் தயங்காது என்று உறுதி பட கூறிக்கொள்கிறேன்.
நமது சங்கம் .. நமது வலிமை..
நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். ஒன்று படுவோம் உயர்வடைவோம். நன்றி.. வணக்கம்.
இவ்வாறு முரளி இராமநாராயணன். கூறி உள்ளார்.