கே.ஆர்.வினோத் இயக்கத்தில், பொன்.பார்த்திபன் எழுத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நாயகியாக அஸ்மின் நடிக்க, முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
வருகிற பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசியபோது “நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன். சினிமாவிலும் அதைப் பின்பற்ற நினைத்தேன். சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரைத் தேர்வு செய்தேன். எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதை சினிமாவிலும் நான் தொடர விரும்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் போதும், நடப்பது நடக்கும். பலன் நல்லதாகவே இருக்கும். இந்தப் படத்திற்கு ஐந்து கதாநாயகிகளைப் பார்த்து ஆறாவதாகத்தான் அஸ்மின் வந்தார்.
இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. படத்தின் தலைப்பைப் பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது, பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள். அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். ஃபிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நான் சினிமாவுக்கு வந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. நான் அரசியலிலும் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறேன். அரசியலுக்கு வந்து பெரிய பதவியை அடைய வேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
இவ்வாறு தயாரிப்பாளர் நடிகர் லெனின் கூறினார்.
