படம்: லத்தி
நடிப்பு: விஷால், ரமணா, சாகர், பிரபு, மிஷா கோஷல், சுனேனா, ஐஸ்வர்யா, கண்ணன் பிரணா, சன்னி பி.என்.,
முனிஷ்காந்த், வெங்கடேஷ், லிரிஷ் ராகவ், தலைவாசல் விஜய்
தயாரிப்பு: ரமணா, நந்தா
இசை:யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம், பாலகிருஷ்ணா
இயக்கம்: ஏ.வினோத்குமார்
பி ஆர் ஒ: ஜான்சன்
முருகானந்தம் (விஷால்) சஸ்பென்சனில் இருக்கும் கான்ஸ்டபிள். பெண் ஒருவரை பலாத்கார வழக்கில் சரியான ஆக்ஷன் எடுக்கவில்லை என்பதால் சஸ்பென்ட் செய்யப்படு கிறார். மேலதிகாரியின் சிபாரிசில் மீண்டும் பணியில் சேர்கிறார். ஒரு சமயம் மேலதிகாரியின் மகளிடம் ரவுடி வெள்ளை (ரமணா) தகராறு செய்ய கோபம் அடையும் அதிகாரி வெள்ளையை கடத்தி வருகிறார். கான்ஸ்டபிள் முருகானந்தத்தை அழைத்து அவனுக்கு லத்தியால் லாடம் கட்ட வைக்கிறார். தன்னை அடித்த போலீஸை தேடிப் பிடித்து பழிவாங்க துடிக்கும் வெள்ளை அவரை கண்டுபிடித்து கொல்ல பின்தொடர்கிறான். தனி ஆளாக சிக்கிக்கொள்ளும் கான்ஸ்டபிள், வெள்ளையின் நூற்றுக்கணக் கான அடியாட்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிறார். இறுதியில் அவர்களை எப்படி தனி ஆளாக கான்ஸ்டபிள் அழிக்கிறார், அவர்களிடம் சிக்கிய தனது மகனை எப்படி மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
போலீஸ் அதிகாரியாக நடிப்பது கொஞ்சம் எளிது ஆனால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார் விஷால்.
ரவுடி வெள்ளையை (ரமணா) கட்டி வைத்து லத்தியை இறுக்கப் பிடித்து அவரை கண்மண் தெரியாமல் அடித்து லாடம் கட்டும் போது மிரள வைக்கிறார்.
அடுத்தடுத்த காட்சிகளில் தன்னை அடித்த போலீஸை ரவுடி ரமணா தேடும் படலம் தொடங்கி விடுகிறது.
செல்போனில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரிங்டோனை வைத்து விஷாலை அடையாளம் காண ரமணாவும், அவரது அடியாட்களும் சென்னை யில் உள்ள அத்தனை போலீஸ் ஸ்டேஷனையும் அலசுவது, விஷால் செல்போன் டோனை செக் செய்யும்போது அது பக்தி பாடலாக ஒலிப்பது அப்ளாஸ் அள்ளுகிறது. ஆனால் ரிங்டோன் எப்படி மாறியது என்பதற்கு விளக்கம் இல்லை.
விஷாலை பின்தொடரும் ரமணா திடீரென்று அவர் செல்போனில் கண்மணி பாடல் ஒலிக்க அதைக் கேட்டு விஷாலை தாக்க ரமணா பாய்வது படபடப்பு.
மகனை வீட்டுக்கு அழைத்து வர விஷால் பள்ளிக்கு செல்லும் போது தொடங்கும் கிளைமாக்ஸ் அடுத்த அரை மணி நேரத்துக்கு தியேட்டரை போர்களமாக மாற்றிவிடுகிறது.
ஆக்ஷன், நடிப்பு என ஒரே நேரத்தில் இரண்டையும் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் விஷால் அதில் நூறு சதவீதம் சாதித்திருக்கிறார்.
கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தில் எந்த இடத்தில் எப்படி விழுகிறார், எப்படி குதிக்கிறார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பணயம் வைத்திருக் கிறார் விஷால். இப்படி பேய்த்தன மாக நடித்தால் கை, கால் எலும்பு முறியத்தான் செய்யும்..
மகனை ரமணா கூட்டம் பிடித்து மண்ணில் புதைத்துவிட்டதாக கூறியதும் பிள்ளை பாசத்தால் விஷால் அழுவதும் அதற்காக தன் உயிரை தரவும் முன்வரும்போது உருக வைக்கிறார்.
நூற்றுக்கணக்கான ரவுடிகள் அரிவாள் , கத்தி, இரும்பு தடியால் தாக்க அவ்வளவு அடியும் விஷால் தாங்கிக் கொள்வது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
விஷால் மனைவியாக சுனேனா நடித்திருக்கிறார்.
ரவுடி வெள்ளையாக வரும் ரமணா அவரது தந்தை சுறாவாக வரும் சன்னி அசல் ரவுடியாக வலம் வருகின்றனர்.
படத்தை ரமணா, நந்தா தயாரித்திருக்கின்றனர்.
பின்னணி இசையில் பிரமாண்டம் காட்டி மிரட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா .
பாலசுப்ரமணியம், பாலகிருஷ்ணா இருவரின் கேமிராவும் கிளைமாக்ஸ் காட்சியில் சுழன்றி ருக்கிறது.
“ஒரு உயர் அதிகாரிக்கு பாதிப்பென்றால் போலீஸ் படையே அவருக்காக செல்லும் அதே ஒரு கான்ஸ்டபிளுக்கு பிரச்னையென் றால் யாரும் வர மாட்டார்கள்” என்ற வசனத்தில் ஆயிரம் உண்மை இருக்கிறது. விஷாலின் ஒட்டுமொத்த ஆக்ஷன் மற்றும் நடிப்பையும் பிழிந்திருக்கிறார் இயக்குனர் ஏ.வினோத்குமார். விஷாலுடன் இன்னொரு துணை கதாபாத்திரத்தையும் சேர்த்திருந் தால் ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் நம்பகத் தன்மையை கூட்டியிருக்கலாம்.
லத்தி- கான்ஸ்டபிள் ஒருவரின் அதிரடி வேட்டை..

