படம்: இருமுடி கட்டு
நடிப்பு: ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சுவாசிகா, மிஷாலா லக்ஷ்மன், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கார்த்திக் அதுசுமாலி , மகேஷ், சாய் குமார், பேபி நட்சத்திரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா,
தயாரிப்பு: நவீன் எர்ணேணி, ஒய் ரவிசங்கர்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : விஷ்ணு சர்மா
இயக்கம்: சிவா நிர்வானா
பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா(D’One), அப்துல் நாசர்
கதை : தன் வயலில் விளைந்த வாழையை கடைகளுக்கு சப்ளை செய்யும் ரவி தேஜா தன் ஒரே மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார். வருடா வருடம் இருமுடி கட்டி ஐயப்ப விரதம் இருக்கும் ரவி தேஜா அந்த விரத காலத்தில் மட்டும் குடி, அசைவத்தை தவிர்க்கிறார். ஊரில் யாராவது பெண்களிடம் வம்பு செய்தால் அவர்களை வெளுத்து வாங்கும் ரவி தேஜாவுக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரவி தேஜாவின் ஆசை மகள் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? அவர்களை கண்டுபிடித்து ரவி தேஜா எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்
மது, போதை மருந்து கடத்தல் என்ற பாணியில் இல்லாமல் தந்தை மகள் பாசம் மையமாக வைத்து இருமுடி கதையை சஸ்பென்ஸ் திரில்லராக இயக்குனர் வடிவமைத்திருப்பது வித்தியாசமான சிந்தனை. யார்தான் ரவிதேஜாவின் மகளை கொன்றது என்ற பரபரப்பு கிட்டத்தட்ட இடைவேளை தொடங்கி கிளைமாக்ஸ் வரை செல்வது ரசிகர்களை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறது.
சும்மாவே ஆக்ஷன் காட்சியில் வெளுத்து வாங்குவார் ரவி தேஜா இந்த படத்தில் அவரது மகளை கொன்று விட்டார்கள் என்றால் அவரது ஆக்சன் ஆட்டம் எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதிரி புதிரி செய்கிறார்.
இருமுடி என ஐயப்ப சாமி டைட்டில் வைத்துவிட்டு இப்படி ஒரு திரில்லர் கதையா என்று கேள்வி வராதளவுக்கு ஐயப்ப சாமி பாடல்கள் சேர்த்து கதையை கொண்டு சென்று இருப்பது பக்தி பரவசத்தை படர விடுகிறது. பல ஆண்டுகளாக காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் சாமியே ஐயப்பா பாடல், வில்லாதி வீரனே போன்ற ஐயப்ப பக்தி பாடல்கள் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் படத்தில் ஒலிப்பதுடன் அந்தப் பாடல்களுக்கு ஏற்ப ரவி தேஜா மற்றும் நடன குழுவினர் பக்தியுடன் ஆடும் காட்சிகள் நிஜ ஐயப்ப பக்தர்களின் பூஜையில் பங்கேற்ற திருப்தியை தருகிறது

பிரியா பவானி சங்கர, ரவி தேஜாவின் மனைவியாக சராசரி குடும்ப பெண்ணாக நடித்து வேடத்தை நிஜமாக்கியிருக்கிறார். ரவி தேஜாவின் மகளாக வரும் பேபி நட்சத்திராவும் துருதுருவென நடித்து கவர்கிறார். வழக்கமாக படங்களில் கண்ணீர் சிந்த வைக்கும் சுவாசிகா இதில் வில்லித்தனமான பாத்திரத்தில் மிரட்டுகிறார்
படத்தை நவீன் எர்ணேணி, ஒய் ரவிசங்கர் தயாரித்திருக் கின்றனர்
விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு காட்சிகளை கண்களுக்குள் நிழலாட விடுகிறது.
இயக்குனர் சிவா நிர்வானா ஆன்மீகத்துக்கும் தந்தை மகள் பாசத்துக்கும் ஒரு பாலம் போட்டிருக்கிறார்.
இருமுடி – மகள்களுடன் சென்று ஒருமுறை பார்க்கலாம்..

Review by
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com
