அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்திய – மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும் எனஅ கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு பேருந்துகள் இயக்கப்படாமல், பொதுநிறுவனங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது.
சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்த போராட்ட அறிவிப்பிற்கு ஆதரவாக பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டம் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 31% பேருந்துகளே இயக்கப்படுவதால், பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சுமார் 20 கோடி பேர் பங்கேற்றுள்ள இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் உடனடியாக மத்திய – மாநில அரசுகள் தலையிட்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகள் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.