தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நேற்று மாலை பத்திரிக்கை யாளர்களை சந்தித்தார். இயக்குநர் டி. ராஜேந்திரன், தனது மகன் சிம்பு நடித்து ஜனவரி 14,2021 ல் வெளியாகும் “ஈஸ்வரன்” படத்தை தடை செய்ய, தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவதாக, கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிரான தனது தரப்பு நியாயங்களை கூறினார்.
ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தை எடுக்கும்போது ஒவ்வொரு தயாரிப்பாளரும் சந்திக்கும் பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் நானறிவேன். நடிகர் சிம்புவை வைத்து “அன்பானவன், அசராதவன், அடங்காதவன்” எனும் படத்தை எடுத்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள். படப்பிடிப்பின் மீது அவர் ஒத்துழைக்காத காரணத்தால் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்களை மட்டும் வைத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படத்தை வெளியிடுவதால் ஏற்படும் பெரும் இழப்புகளுக்கு ஈடாக அவர் எனக்கு மற்றொரு படம் தருகிறேன் என கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நம்பிக்கையில் தான் அப்படம் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி படம் சம்பந்தமான அனைத்து விநியோக தளங்களிலும் அப்படம் கடும் இழப்பை சந்தித்தது. அப்போது நடிகர் விஷால் தலைமையில் செயலபட்டுகொண்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினேன். இரு தரப்பிலும் முறையான விசாரணைகளை தயாரிப்பாளர் சங்க குழு செய்தது. சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்திரன் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடாக 7.2 கோடி ரூபாய் மூன்று பட ரிலீஸில் செலுத்தப்படும் எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். “அன்பானவன், அசராதவன், அடங்காதவன்” படத்திற்கு பிறகு வெளியாகும் மூன்று படத்தில் ஒவ்வொரு படத்தின் போதும் 2.4 கோடி செலுத்தப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. நடிகர் சிம்பு அந்நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்கள் வேறு விதிகளின் படி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனால் அவர் அடுத்ததாக ஒப்பந்தமாகும் அடுத்த படத்திலிருந்து இழப்பீட்டு தொகை தரப்படுமென கூறப்பட்டது. அவர் அடுத்து ஒப்பந்தமாகிய முதல் படம் “ஈஸ்வரன்” ஆகும். இதனையொட்டி பத்து நாட்களுக்கு முன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை மற்றும் மதிப்பு குழுவை இந்த விசயத்தில் தலையிடுமாறு முறையிட்டேன். அந்த வகையில் டி.ராஜேந்தர் அவர்களுக்கு ஒப்பந்தம் ஞாபகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் எனது அரசியல் தொடர்புகளை பயனபடுத்தி ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை நான் தடை செய்வதாக குற்றம் சாட்டியதை கண்டு கடும் அதிர்ச்சியுற்றேன். இந்த விவாகரத்தில் எனக்காக இழப்பீட்டு தொகையை தர வேண்டுமென நான் அழுத்தமும் தரவில்லை இது மிகவும் வெளிப்படையாக அறியப்பட்ட உண்மை. இப்படத்தில் பெரும் இழப்பை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கான இழப்பீட்டுக்காக மட்டுமே முறையிடப்பட்டது என்பதே உண்மை.