சென்னையில் தெருவுக்கு விவேக் பெயர் வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு நடிகர் உதயா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் வருமாறு:
விடுநர்:
உதயா,
திரைப்பட நடிகர்
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு மு.க. ஸ்டாலின் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை
பெருமதிப்பிற்குரிய ஐயா,
அன்பு வணக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் திரு விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில், அவரது கலை உலக மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக அவர் வாழ்ந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவரது நண்பனாகவும், சக நடிகராகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.
உடனடியாக அதை தங்களின் மேலான கவனத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் அண்ணன் திரு பூச்சிமுருகன் அவர்கள் எடுத்துச் சென்ற நிலையில், நடிகர் திரு விவேக் அவர்களின் குடும்பத்தினரும் தங்களை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் கோரிக்கைகள் போன்ற எந்த ஒரு விஷயத்திலும் எள்ளளவும் தாமதமின்றி எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயலாற்றும் தாங்கள் இந்த கோரிக்கையையும் உடனடியாக பரிசீலித்து நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்டும் அரசாணையை வெளியிட்டுள்ளீர்கள்.
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாடர்ன் மனுநீதி சோழனாகவும், கலைஞர்களை கவுரவிப்பதில் அதியமானின் அப்டேடட் வெர்ஷனாகவும் உள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
எங்களது கோரிக்கையை ஏற்று சின்னக் கலைவாணர் விவேக் சாலை குறித்த அரசாணைக்காக *தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
என்றும் தங்கள் உண்மையுள்ள,
உதயா
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்