படம்: கடுக்கா
நடிப்பு: விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா
தயாரிப்பு: கௌரி சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி
இசை: கெவின் டி காஸ்ட்
ஒளிப்பதிவு: சதீஷ்குமார், துரைக்கண்ணு
இயக்கம்: எஸ். எஸ். முருகராசு
ரிலீஸ்: கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஜி தனஞ்ஜெயன்
பிஆர்ஓ: கேப்டன் ஆனந்த்
கதை: சிவசாமி (விஜய் கௌரிஷ்), சாமிநாதன் (ஆதர்ஷ்) இருவரும் நண்பர்கள். சிவசாமிக்கு பெண்களை பின் தொடர்ந்து சைட் அடிப்பது தான் வேலை. சாமிநாதன் பெயிண்ட் வேலை செய்து பிழைக்கிறான். இவர்கள் இருவருக்கும் கிராமத்துக்கு புதிதாக குடிவரும் சுமதி ( ஸ்மேஹா) மீது காதல் பிறக்கிறது. இருவருக்குமே காதல் கடிதம் தருகிறாள் சுமதி. இந்த விவரம் நண்பர்களுக்கு தெரியவந்து சண்டையாக முடிகிறது. ஒரு கட்டத்தில் இருவரையுமே சுமதி காதலிக்கவில்லை கடுக்கா கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதையடுத்து அவர்கள் எடுக்கும் முடிவு என்ன? சுமதியின் கதி என்ன? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
80, 90 கால கட்டங்களில் இயக்குனர் கே பாக்யராஜ் படங்கள் வந்து சக்கை போடு போடும்.. அந்த பாணியில் உருவாகி இருக்கிறது கடுக்கா.
கடுக்கா என்றால் இது கடுக்காயை குறிக்காது மாறாக ஏமாற்றுவது அல்லது துரோகம் செய்வது என்ற பொருளை குறிக்கும்.. ஊர் பக்கத்தில் யாராவது ஏமாற்றினால் கடுக்கா கொடுத்துவிட்டான் என்பார்களே அந்த வார்த்தைதான் இது.
புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் விஜய் கௌரிஷ் வெட்டியாக ஊர் சுற்றுவதும், இளம் பெண்களின் பின்னால் சென்று அவர்களை காதலிப்பதாக கூறி அடி வாங்குவதும் பெரும் கலகலப்பு.
டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு சோல்டர் பேக் மாட்டிக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் போய் பஸ்சுக்காக காத்திருப்பது போல் சைட் அடித்துக் கொண்டு நிற்பதும் யாராவது நக்கலடித்தால் பாக்யராஜ் பாணியில் திருதிருவென அசடுவழிவதும் அரங்கை அமர்க்களப் பட வைக்கிறது. டீக்கடையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் வந்து பளார் அறைவிட்டு, ” இனிமே என் மக கிட்ட சேட்டை பண்ண நீ தொலைஞ்ச.. ” என்று எச்சரிப்பதும் அடி வாங்கிக் கொண்டு தரையில் விழுந்தபடி அதிர்ச்சியில் மிதப்பதுமாக குபீர் சிரிப்பை வரவழைக்கிறார்.
ஸ்மேஹாவை காதலிக்கும் மற்றொரு நபராக வரும் ஆதர்ஷ் தன் பங்குக்கு நகைச்சுவை அலப்பறை செய்கிறார். உச்சா போன தலையணையை எடுத்து மோந்து பார்த்து ரசிப்பது நாற்றம் எடுத்தாலும் முகம் சுளித்தபடி சிரிக்க வைக்கிறது. இதெல்லாம் ரொம்பவே ஓவர்… சென்சாருக்கு இதெல்லாம் கூட புரியாதா என்ற முணுமுணுப்பு அரங்கில் எழுகிறது.
காதலி ஸ்மேஹாவிடம் சபதம் செய்யும் ஆதர்ஷ், “ஒண்ணு சண்டையில சாககணும் இல்ல. ” என்று ஊர் பக்க வசைப்பாட்டை பாதியிலே நிறுத்துவது அதிர்வேட்டு சிரிப்பு.
நாயகி ஸ்மேஹா ஸ்லிம் தோற்றத்தில் அழகும் நடிப்பும் ஆக களைகட்டுகிறார். இரண்டு பேருக்கும் லவ் லெட்டர் கொடுத்து இருவரையும் முட்டாளாக்குவது ஏன் என்ற விவரம் தெரியும்போது அவர் மீது பரிதாபம் பிறக்கிறது.
கெவின் டி காஸ்ட் இசை அமைத்திருக்கிறார்.
சதீஷ்குமார், துரைக்கண்ணு ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.
எஸ். எஸ். முருகராசு இயக்குனர் பாக்யராஜின் பாணியை பட்டவர் தனமாக காப்பி அடிதாலும் பாஸ் மார்க் பெற்று விடுகிறார்.
படத்தில் சில காட்சிகள் ரிப்பீட்டாக வருவது சோர்வை ஏற்படுத்துகிறது. பத்து நிமிடம் கத்தரி போட்டால் படம் வேகம் அதிகரிக்கும்.
கடுக்கா – ரசிகர்களுக்கு கடுக்கா கொடுக்காது..

By
K Jayachandhiran
www.trendingcinemasnow.com
