போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ரோஜா கூட்டம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளத்துடன் அவரை வலை வீசி தேடிவருகிறது போலீஸ்.
தமிழ் நடிகர்களின் போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் அழைத்துள்ளது. அது பற்றி விவரம் வருமாறு:
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாரும் ஒருகிணைந்து செயல்படுகின்றனர்.
சென்ற ஜூன் 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகத்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கைது செய்து. சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் ரோஜா கூட்டம் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர். இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். இருப்பினும் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை.
பின்னர் ஸ்ரீகாந்தின் ரத்தம் சோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள் காலி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவோடு இரவாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவர் மாஜிஸ்திரேட்டிடம், நான் தவறு செய்து விட்டேன்
எனது மகனை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு கூறி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறையில் முதல் வகுப்பு வழங்கவும் அனுமதி அளித்தார்.
முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்த் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம்: கடந்த 2002-ல் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்தேன். நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுடன் 2008-ல் திருமணம் நடைபெற்றது. தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், என்னை வைத்து அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ‘தீங்கிரை’ என்ற படத்தை இயக்கினார். ஒப்பந்தப்படி முழு பணத்தையும் அவர் தரவில்லை. நாங்கள் சந்தித்தபோதெல்லாம் அவர் என்னை மதுபான கூடத்துக்கு அழைத்துச் செல்வார். பின்னர் போதைப் பொருள் கொடுத்தார். கடன் உட்பட குடும்ப பிரச்சினையால் போதைப் பொருளை அடிக்கடி பயன்படுத்த தொடங்கினேன்.
அதன் பிறகு ஆப்பிரிக்க போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான், சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் உள்ளிட்ட மேலும் சிலரிடம் அடிக்கடி நானே நேரடியாகவும், பிற நபர்கள் மூலமாகவும் போதை வஸ்துவை வாங்கினேன். நான் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நான் தவறு செய்துவிட்டேன். இவ்வாறு கண்ணீர் மல்க வாக்குமூலமாக அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டது. தற்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, அவரும் தலைமறைவாக உள்ளார். அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருப்பதால் அவருக்கு வலை வீசி இருக்கிறார்கள்.
