படம்: பேரன்பும் பெருங்கோபமும்
நடிப்பு: விஜித் பச்சான், ஷாலி வேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், ,தீபா சங்கர், கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், என்.பி.கே. எஸ்.லோகு, சாய் வினோத், சி வலினா
தயாரிப்பு: காமாட்சி ஜெயகிருஷ்ணன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: தினேஷ்குமார்
இயக்கம்: சிவபிரகாஷ்
பிஆர்ஓ: ஜான்சன்
அந்த கிராமத்தில் ஜாதி மாறி திருமணம் செய்தால் மேல் ஜாதியினர் ஜோடிகளை எரித்துக் கொல்கிறார்கள். அங்கு பிறந்த விஜித் படிப்பதற்காக கேரளா செல்கிறார். அங்கு உடன் படிக்கும் ஷாலியை காதலிக்கிறார். திருமணம் செய்து கொண்டு சென்றால் ஊரில் பிரச்சனை வரும் என்று பயந்தாலும் காதலியை மனைவியாக்கி அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார். தொடக்கத்தில் அஜித்தின் தாயார் ஹாலியை மருமகளாக ஏற்க தவறுகிறார். பின்னர் அவர் உயர்ஜாதி என்று எண்ணி ஏற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஷாலியன் சாதி விவரம் தெரியவர அவரை ஊர்காரருடன் சேர்ந்து கொல்ல முயல்கிறார். இதை அறிந்த ஷாலியின் கணவர் விஜித் எடுக்க முடிவு என்ன? அதன் விளைவு 20 ஆண்டுகள் கழித்து என்னவாக உருவெடுக்கிறது என்பதை எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக கண்முன் நிகழ்த்துகிறது.
பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என்று பல்வேறு மாறுபட்ட படங்களை தந்த இயக்குனர் ஒளிப்பதிவாளர் நடிகர் தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான், பேரன்பும் பெருங்கோபமும் பட கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். டைட்டிலுக்கு ஏற்ப கதையும் மிகவும் கனமானது. இந்த கதாபாத்திரத்திற்கு புதுமுகமான விஜித் தாக்குப் பிடிப்பாரா என்று தொடக்கத்தில் சந்தேகம் இருந்தாலும் அவரது மௌனமான கோபத்தில் இந்த பாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்களோ என்று தோன்றும் அளவுக்கு மிக பொருத்தமாக நடித்து முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.
அறிமுக படத்திலேயே மீசை தாடி நரைக்க ஒரு ஹீரோ என்ட்ரீ ஆகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டுமோ அந்த துணிச்சல் அஜித் பச்சானுக்கு இருந்திருக்கிறது. அதற்காக ஒரு அப்ளாஸ் தரலாம்.
சாதிவெறி பிடித்தவர்களாக மைம் கோபி, அருள்தாஸ் நடித்திருக்கிறார்கள். இவர்களது வில்லத்தனம் கொஞ்சம் தான் விஜித்தின் தாயாக நடித்திருக்கும் சுபத்ராவின் வில்லதனம் தான் திகிலுட்டுகிறது.
சாதி மாறி திருமணம் செய்தால் ஆணவக் கொலை என்பது அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்திருந்தாலும் அந்த படங்கள் எல்லாமே ஆணவக் கொலையின் கொடூரத்தை சொல்லி இருக்கிறதே தவிர அதற்கு இன்னொரு பரிமாணத்தை எந்த படமும் தந்ததில்லை ஒரு புதிய பரிமாணத்தை இப்படத்தில் இயக்குனர் சிவபிரகாஷ் தந்திருப்பது மாறுபட்ட சிந்தனை. பிறப்பால் சாதி கிடையாது வளர்ப்பால் தான் சாதி என்ற ஒரு கருத்தைத்தான் இந்த படத்தில் ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒரு படத்திற்கு யார் இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் . அவர்தான் இசையமைத்து இருக்கிறார்.. ஆம், அவர் வேறு யாருமல்ல இசைஞானி இளையராஜாதான். தனது ராஜாங்கத்தை மீண்டும் ஒருமுறை நடத்தி இருக்கிறார்.
தினேஷ்குமார் ஒளிப்பதிவு ஓகே.
பேரன்பும் பெருங் கோபமும் – இளம் உள்ளங்களில் புரட்சி தீ ஏற்றும்.

