படம்: தண்டேல்
நடிப்பு: நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், நரேன்
தயாரிப்பு:பண்ணி வாஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: ஷ்யாம் தத்
இயக்கம்: சந்து மொண்டேட்டி
பி ஆர் ஓ: யுவராஜ்
அந்த மீனவ கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள ஆண்கள் மூன்று மாதம் வீட்டில் இருந்துவிட்டு மற்ற ஒன்பது மாதங்கள் கடலில் மீன் பிடிக்க சென்று விடுவது வழக்கம். மீனவர்களுக்கு தலைமை தாங்கும் ராஜு ( நாக சைதன்யா) தலைமையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் ஒரு சூழலில் அங்கு ஏற்படும் ஆபத்தை எண்ணி பயப்படும் ராஜுவின் காதலி சத்யா ( சாய் பல்லவி) ‘நீ மீன் வேட்டைக்கு செல்லாதே அதை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடிவு செய்’ என்கிறாள். ஆனால் மீனவர்கள் தலைவன் என்ற முறையில் ராஜு காதலி சொல்லை மீறி கடலுக்கு செல்ல அப்போது ஏற்படும் புயல் வெள்ளத்தில் சிக்கி பாகிஸ்தான் பார்டரில் சென்று அந்த ராணுவத்தினர் பிடியில் சிக்கிக் கொள்கிறான். இந்நிலையில் சத்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ராஜு திரும்பி வந்தானா,? அவனை சத்யா ஏற்றுக்கொண்டாளா? என்ற கேள்விகளுக்கு உணர்ச்சிகரமான பதில் அளிக்கிறது தண்டேல்.
அது என்ன தண்டேல்.. அதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழும நிலையில் மீனவர்களின் தலைவனுக்கு தண்டேல் என்று பெயர் என இயக்குனர் விளக்கம் அளிக்கிறார்
இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் தேசபக்தி, குடும்ப உறவு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு உன்னதமான காதல் ஆகியவற்றை கலந்து நிறைவான ஒரு படமாக தந்திருக்கிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.
படத்தில் ராஜூ கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நாக சைதன்யாவுக்கு அவர் திரையுலக வாழ்க்கையில் கிடைத்த அரிய படமாக அமைந்திருக்கிறது தண்டேல் அந்த வாய்ப்பை நழுவ விடாமல் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு புதிய இமேஜ் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்தளவுக்கு அவரது முழு உழைப்பையும் இந்த கதாபாத்திரத்துக்காக தந்திருக்கிறார்.
“நீ மீன் பிடிக்க செல்லக்கூடாது. உனக்கு நான் வேண்டுமா? இல்ல தண்டேல் என்ற பதவி வேண்டுமா ? என்று சாய் பல்லவி கோபத்துடன் கேட்க அவரை சமாதானம் செய்வதற்காக நாக சைதன்யா படும் பாடும் அதேநேரத்தில் அங்கிருக்கும் ரயில் புறப்பட அதில் ஏறினால்தான் சக மீனவர்களுடன் செல்லமுடியும் என்ற தவிப்பையும் ஒருசேர காட்டி படபடக்க வைக்கிறார் சைதன்யா. அதேபோல் பாகிஸ்தான் சிறையில் அடைபட்டு அங்குள்ள சிறை கைதிகளிடம் தேசபக்தி கொண்டு நாக சைதன்யா மோதும் காட்சிகள் அரங்கை பரபரக்குகிறது.
நாக சைதன்யாவே இந்த அளவுக்கு நடித்தால் சாய்பல்லவி நடிப்பை கேட்க வேண்டுமா? எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் நடிப்பில்..
சைதன்யாவிடம் 100% காதலை
கொடடும் சாய்பல்லவி தன் பேச்சை சைதன்யா மதிக்கவில்லை என்பதற்காக அவரிடம் போனில் கூட பேச முடியாது என்று வைராக்கியமாக இருப்பதும் கடைசி வரை அந்த வைராக்கியத்தை அவர் கடைபிடிப்பதும் என ஒரு காதல் யுத்தத்தையே நடத்தி இருக்கிறார்.
இதுபோல் சாய்பல்லவிக்கு நடிப்பை வாரி வழங்க ஏராளமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார் இயக்குனர்.
சும்மாவே நடிப்பார் சாய் பல்லவி.. வாய்ப்பு கிடைத்தால் வெளுத்துத்தான் வாங்குவார்.. அதைத்தான் இதில் செய்திருக்கிறார்.
படத்தில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரங்கள் நாக சைதன்யா, சாய்பல்லவி என இருவர் மட்டும்தான். இவர்களுக்கு கூடுதலாக உரம் சேர்த்திருக்கிறார்கள் உடன் நடித்திருக்கும் நரேன், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள்..
ஷ்யாம் தத் ஒளிப்பதிவு படத்தை கண்ணுக்குள் ஓவியமாக தீட்டுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசை படத்தை இன்னொரு தளத்திற்கு உயர்த்தி இருக்கிறது.
அல்லு அரவிந்த் வழங்க பண்ணி வாஸ் படத்தை தயாரித்திருக்கிறார்.
தண்டேல் – கடல் ஆழம்போல் காதலின் ஆழம் காட்டுகிரது.

