படம்: வீராயி மக்கள்
நடிப்பு: வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமரி, ஜெரால்ட் மில்டன், பாண்டி அக்கா
தயாரிப்பு: சுரேஷ் நந்தா
இசை: தீபன் சக்கரவர்த்தி
ஒளிப்பதிவு: எம் ஸ்ரீனிவாசன்
இயக்கம்: நாகராஜ் கருப்பையா
பி ஆர் ஓ: சதீஷ் (AIM)
தீயத்தூர் கிராமத்தில் ஒரு தாய்க்கு பிறந்த அண்ணன் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கை சிறுவயதில் தாயுடன் சென்று சுள்ளி பொறுக்கி ஏழ்மையை தழுவி ஆனால் பாசம் பொங்கிட வளர்கின்றனர். காலம் செல்லும் வேகத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் ஆகின்றனர். அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம், தங்கை குடும்பம் என்று ஆகிறது. மூத்த மருமகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று இளைய மருமகள் கோபம் கொண்டு எந்நேரமும் மாமியார் வீராயியுடன் சண்டைக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் இது உச்சத்தை அடைகிறது. குடும்பம், சொத்துக்கள் பிரிந்த நிலையில் வீராயி மரணம் அடைகிறார் அன்று முதல் அண்ணன் குடும்பத்திற்கும், தம்பி குடும்பத்துக்கும் பகை தொடர்கிறது. இதனால் அவர்களின் பிள்ளைகள் கூட மோதிக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. வெளியூரில் இருக்கும் மூத்த அண்ணனின் மகன் அய்யனார் ( சுரேஷ் நந்தா) ஊர் திரும்புகிறான். எந்நேரமும் வீட்டில் உறவினர்களுடன் சண்டை நடப்பதை கண்டு மனம் நொந்து இவர்களை ஒற்றுமையுடன் இருக்க செய்ய முயல்கிறான். இதற்கிடையில் அத்தை மகள் மீது அய்யனாருக்கு காதல் மலர்கிறது. ஏற்கனவே தன் தங்கையை வீட்டை விட்டு துரத்தியடித்த அண்ணனுக்கு மீண்டும் அவரை தங்கையாக ஏற்க மனம் இல்லாத நிலையில் அவரது மகளை அய்யனார் எப்படி மணக்க போகிறார்? பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையுமா? என்ற உணர்வுபூர்வமான கேள்வி களுக்குஉருக்கமான பதில் அளிக்கிறது வீராயி மக்கள்.
அந்தக் காலத்தில் குடும்ப படங்கள் பாசமலர், பழனி என்று நடிகர் திலகம் சிவாஜி நடித்த பல படங்கள் அண்ணன் தங்கை பாசம் உறவுகளை மையமாக வைத்து வெளி வந்திருக்கிறது. பின்னர் மசாலா படங்கள் ஆக்கிரமித்தன, இந்நிலையில் திடீரென்று விசு காலத்திலும் குடும்ப படங்கள் கை ஓங்கி இருந்தது பிறகு மீண்டும் ஆக்சன் படங்கள் மசாலா படங்கள் என்று திரையை ஆக்ரமித்தன. 2000 காலகட்டங்களில் மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு பிறகு ஒரு சில படங்கள் குடும்ப படங்களாக வந்தன. தற்போது குத்து வெட்டு ரத்தக்களரி படங்கள் தான் திரை அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் குடும்ப உறவுகளை முழுக்க முழுக்கச் சொல்லும் ஒரு படமாக திரைக்கு வந்திருக்கிறது வீராயி மக்கள்.
படத்தில் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி தனது பண்பட்ட நடிப்பால் படம் முழுவதையும் தன் தோளில் தாங்கிக் செல்கிறார். அவரது தம்பியாக நடத்திருக்கும் மறைந்த நடிகர் மாரிமுத்து எவ்வளவு உணர்வுபூர்வமாக நடிக்க முடியுமோ அவ்வளவு உணர்வுபூர்வமாக நடித்திருப்ப துடன் பின்னர் இந்த படம் முடிந்த பிறகு உயிரையும் கொடுத்து விட்டார் என்று தன் சொல்ல வேண்டும். மாரிமுத்து நடித்த கடைசி படம் இதுதான்.
ரத்தமும் சதையும் உணர்வுமாக உருவான கதையில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா, ரமா, செந்தி, பாண்டி அக்கா என எல்லோரும் அந்தந்த பாத்திரத்தில் மூழ்கிப் போய் இருக்கிறார்கள்.
தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா சங்கருக்கு உருக்கமாக நடிக்க ஒரு காட்சி கொடுத்தால்போதும் தனது அழுகையால் அரங்கையே நிலைகுலையச் செய்து விடுவார் அப்படித்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார். அவரது நடிப்பு கண்ணீரை வரவழைக்கும்.
இளம் ஜோடிகளாக சுரேஷ் நந்தா, நந்தனா நடித்திருக்கின்றனர். முறைப்பெண், முறை மாப்பிள்ளை என்ற முறையோடு எல்லை மீறாமல் நடித்து மனதைக் கவர்கின்றனர்.
இப்படத்தில் சுரேஷ் நந்தா ஹீரோவாக நடித்திருப்பத்துடன் படத்தையும் தயாரித்திருக்கிறார்.
பிரிந்து கிடக்கும் குடும்பத்தை எப்படி எல்லாம் சேர்த்து வைக்க முடியுமோ அப்படி எல்லாம் சேர்த்து வைக்க சுரேஷ் நந்தா எடுக்கும் முயற்சிகளில் அவமானங்கள் பட்டாலும் அதில் வெற்றி பெறுவது பலருக்கு நம்பிக்கை விதை விதைக்கும்.
பெரும்பாலும் எல்லோரும் புதுமுகங்கள் என்றாலும் அவர்கள் அந்தந்த பாத்திரங்களில் நடிக்கும் போது எந்த சாயலும் இல்லாமல் நடித்திருப்பது கதாபாத்திரங். களை நிஜ பாத்திரங்களாக கண்முன் நிழலாட விடுகிறது.
குடும்ப படங்களை இயக்குவதற்கு ஒரு இயக்குனர் இல்லாமல் போய் விட்டாரே என்று. கடந்த சில ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டி ருந்த ரசிகர்களுக்கு பொக்கிஷ மாக கிடைத்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.

“ஆயிரம் பிறப்பா இருக்கிறது ஒரே பிறப்பு தானே, உறவுகளுடன் வாழ்ந்து விட்டு போகலாமே” போன்ற அற்புதமான வசனங்கள் படத்தை பட்டை தீட்டுகிறது.
காட்சிகளிலும் பாடல்களிலும் எந்தவித திசை திருப்பமும் இல்லாமல் மென்மையாக இசையமைத்து யார் இந்த இசையமைப்பாளர் என திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தீபன் சக்கரவர்த்தி.
எம் சீனிவாசன் ஒளிப்பதிவு அப்பட்டமாக வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது.
வீராயி மக்கள் – பிரிந்த குடும்பங்கள் பார்த்தால் ஒன்றிணையும்.

