படம்: ராயன்
நடிப்பு: தனுஷ், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வ ராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, பருத்திவீரன் சரவணன், துஷ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார்,
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
இசை: ஏ ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
இயக்கம்: தனுஷ்
பி ஆர் ஓ: ரியாஸ் கே அஹமத்
நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ராயன் என்பது முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம்.
ஊர் பக்கத்தில் ராயனையும் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை தனியாக விட்டுவிட்டு செல்லும் பெற்றோர்கள் மீண்டும் திரும்பிய பாடில்லை. இந்நிலையில் பூசாரி வீட்டுக்கு அடைக்கலம் தேடி ராயன் செல்கிறான். அந்த பூசாரியும் ராயனின் தங்கையை விற்க முயல்கிறார். அவரை வெட்டி சாய்த்து விட்டு கை குழந்தையாக இருக்கும் தங்கை மற்றும் இரண்டு தம்பிகளுடன் சென்னை வந்து சேர்கிறான் ராயன். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்து எப்படியோ தன் தம்பிகள் மற்றும் தங்கையை வளர்த்து ஆளாக்கு கிறான். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் துரை (சரவணன்), சேது (எஸ் ஜே சூர்யா) இரண்டு ரவுடிகள் எப்போது மோதிக் கொள்வார்களோ என்ற பதற்றம் நிலவுகிறது. ஒரு கட்டத்தில் இந்த ரவுடிகளின் பார்வை ராயன் பக்கம் திரும்பு கிறது. அவனை தீர்த்துக்கட்ட அடியாட்களை இறக்குகின்றனர். அவர்களை எதிர்த்து ராயன் களத்தில் குதிக்கிறான். துரோகம், சூழ்ச்சி எல்லாம் சேர்ந்து ராயனை தனி ஆளாக்க முயற்சிக்கிறது. இதன் முடிவு என்ன என்பதை ரத்தம் தெறிக்க சொல்கிறது ராயன் கிளைமாக்ஸ்.
வடசென்னை, புதுப்பேட்டை, அசுரன், கர்ணன் போன்ற ஒரு மாறுபட்ட கதாபாத்திர வரிசையில் ராயன் என்ற கதாபாத்திரம் மூலம் தன்னை வித்தியாசமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அவரே படத்தையும் இயக்கி இருக்கிறார். தான் இயக்குகிறோம் என்பதற்காக முழுக்க முழுக்க தன்னையே முன் நிறுத்திக் கொள்ளாமல் தம்பியாக நடித்திருக்கும் சந்திப் கிஷனுக்கும் ஒரு முக்கியத்துவத்தை தந்திருப்பது படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
தனுஷ் தனது தம்பிகள் மற்றும் தங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அன்பு காட்டுவதும், தப்பு செய்தால் தட்டிக் கேட்பதுமாக பொறுப்பான அண்ணனாக நடித்திருக்கிறார். ஆனால் அவருக்குள் ஒரு ஆக்சன் கணல் தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரது தோற்றம் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
தனுஷின் 50வது படாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. அதனால். ரவுடி பேபி போன்ற ஒரு.விறுவிறுப் பான நடனம் ரசிகர்களுக்கு இழப்பு.
தன்மீது மரியாதை வைத்திருக்கும் தம்பிகள் சந்திப், காளிதாஸ் இருவரும் தனக்கு எதிராக திரும்புவார்கள் என்பதை தனுஷும் நினைத்துப் பார்க்க வில்லை ரசிகர்களும் எதிர்பார்க்க வில்லை அவர்களின் திடீர் மாற்றம் படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையுமே திருப்பி போட்டு விடுகிறது.
முன்பு அண்ணன் என்ற தெரியாமல் குத்திவிட்டோம் இப்போது தெரிந்தே குத்த போறோம் என்று சந்தீப்பும் காளிதாசும் எஸ் ஜே சூர்யாவிடம் கூறும்போது இது என்ன டயலாக் என்று எண்ணத் தோன்றுகிறது.. ஏற்கனவே தனுசை நேருக்கு நேர் குத்தும்போது அண்ணனைத் தான் குத்துகிறோம் என்று தெரிந்துதான் குத்துகிறார்கள் பிறகு தெரியாமல் குத்தினோம் என்று சொல்வது முரணாக உள்ளது.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி தங்கை பாசம் என்று தனுஷ் தொடக்க காட்சிகளில் கதையைப தொடங்கும்போது அழகான ஒரு குடும்ப கதை தருவார் என்று பார்த்தால் அது ரவுடி கூட்ட கதையாக மாறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற ரவுடி கதைகளை சமீப காலமாக பல படங்களில் ரத்தம் தெறிக்க பார்த்து ரசிகர்கள் நொந்து போயிருக்கும் நிலையில் மீண்டும் இரத்த வெள்ளத்தில் ஒரு படத்தை தனுஷ் இயக்கி தர வேண்டுமா?
தனுஷ் இயக்கத்தில் எதிர்பார்த்தது காதல் கதை அல்ல ஆனால் இது போன்ற வன்முறை கதையும் அல்ல.. தனுஷின் இயக்கம் என்று எண்ணியவுடன் ஒரு வித்தியாசமான கற்பனைக்கு நம்மை அழைத்துச் சென்றிருந்தார் ஆனால் ஆட்டுக்கல் சுற்றி சுற்றி உரலுக்குள்ளே இருப்பது போல் ராயன் கதையும் வன்முறை களத்திலேயே சுற்றி முடிகிறது.
எஸ் ஜே சூர்யா வழக்கம்போல் கூச்சல போட்டு வில்லத்தனத்தை அரங்கேற்றுகிறார். சரவணன் உட்கார்ந்த இடத்திலேயே வில்லத் தனத்தை வெளிப்படுத்த முயல்கிறார்.
பிரகாஷ்ராஜ் நரி தந்திர போலீசாக வந்து கதைக்குள் கலகம் மூட்டுகிறார்
தூஷ்ரா விஜயன், அபர்ணா முரளி சொன்னதை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
செல்வராகவன் தனுஷின் அண்ணன் வயது பாத்திரத்தி லேயே நடித்திருக்கிறார்.
படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஏ ஆர் ரகுமானின் இசை. கிளைமாக்ஸ் அரக்கன் பாடல் ரத்த ஹோலியாக மாறுகிறது.
ரசிகர்களை டென்ஷன் மூடியிலேயே வைக்க வேண்டும் என்பதற்காக இருள் சூழ்ந்த நிலையிலேயே காட்சிகள் அனைத்தையும் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
ராயன் – ரத்த களரி.

