தமிழக முன்னாள் துணை அமைச்சர் மறைந்த ஐசரி வேலன் திருவுருவ சிலையை உலக நாயகன் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
சென்னை அடையாறில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத்துறை துணை
அமைச்சரும், திரைப்பட கலைஞர் மறைந்த ஐசரி வேலன் 35வது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாள ராக கலந்துகொண்ட கமல் ஹாசன் ஐசரி வேலன் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் “இலவச குடும்ப சுகாதார அட்டை” வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளை வழங்கினார் கமலஹாசன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பயன் பெற்றார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன் ஐசரி வேலன் உடனான நட்பு குறித்தும், திரைப் படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் டாக்டர். ஐசரி கே. கணேஷை வாழ்த்தி பாராட்டினார்.

அதனை தொடர்ந்து ஐசரி வேலனுடன் நடித்த நடிகர் பிரபு, நடிகை லதா, இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் பிரசாந்த், பாக்யராஜ், கவுண்டமணி, நடிகர் செந்தில், எஸ்.வி.சேகர், ராஜேஷ் , சின்னி ஜெயந்த், நடிகைகள் ஜெயசித்ரா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராதிகா, குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்கியராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட முன்னனி நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்தும் அவர் செய்த சேவைகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமது தந்தை ஐசரி வேலன் நினைவு நாளான மே 14 ஆம் தேதி ஆண்டுதோறும் நலிந்த நாடக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விருந்து மற்றும் புத்தாடைகள் வழங்கி சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
