முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமி ஆணையம் தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும் அம்மா என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவருமான கடந்த 2016ம் ஆண்டு திடீரென்று உடல்நிலை பாதிக்கப் பட்டது. போயஸ் கார்ர்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு இரவில் அழைத்துச் சென்று சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் மருத்துவர் களும். அதிமுக முன்னணி தலைவர்களும் கூறிவந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இதனால் தொண்டர்கள் கதறி அழுதனர்.

பின்னர் சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசப்பட்டது. அதிமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஓ.பன்னீர் செல்வமும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பேட்டி அளித் தார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள், என 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுக சாமி ஆணையத்தின் முன் ஆஜராகி பதில் அளித்தனர்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலை யில் விசாரிக்க வேண்டும் என அப்பல் லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கேள்வி எழுப்பிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு முறை விசாரணை ஆணயத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு கடைசியாக சமீபத்தில் சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மதித்தார்.
மார்ச் 21ம் தேதி ஓ. பன்னீர் செல்வம் ஆறுமுகச்சாமி ஆணையம் முன் ஆஜரானார். ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன், சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும் ஆணையத்தில் ஆஜராகினர்.
அப்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்ட கேளிவிகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டார் என்று எனக்கு தெரியாது. அப்போது நான் என்னுடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இருந்தேன். என் உதவியாளர் நள்ளிரவு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அடுத்த நாள் பிற்பகலில் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு நான் சென்றேன். அங்கிருந்த அப்போதைய தலைமை செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்ற விவரங்கள் எனக்கு தெரியாது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல்நாள் மெட்ரோ ரெயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை நேரில் பார்த்தேன். அதன் பிறகு அவரை பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தது மட்டும் தெரியும். வேறு எதுவும் எனக்கு தெரியாது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேக எண்ணத்தின் அடிப்படையிலே ஆணையம் அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப் பட்டு அமைக்கப்பட்டது. அப்போதைய துணை முதல்-அமைச்சர் என்ற அடிப் படையில் விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான கோப்பில் நானும் கையெழுத்திட்டேன்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு கடைசியாக அளிக்கப் பட்ட சிகிச்சை பற்றி தெரியாது. யார் முடிவின்படி டாக்டர்கள் ஜெயலலிதா வுக்கு இருதய சிகிச்சை அளித்தார்கள் என்பதும் தெரியாது. மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை. அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல யாரும் கோரவில்லை.
இவ்வாறு முதல் நாள் வாக்கு மூலம் அளித்த ஓ.பன்னீர் செல்வத்திடம் இன்று (மார்ச் 22ம் தேதி) 2வது நாளாக விசாரணை நடந்தது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் அவரிடம் சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்திடம்,”விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான 8 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அளித்துள்ள சாட்சியத்தில், ஜெயலலி தாவுக்கு எதிராக 2011-12 காலகட்டத்திலும் அதன் பின்னரும் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் தீட்டியது இல்லை என்று கூறியுள்ளனரே, இதுசரியா?” என்றார்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலில், ”சாட்சியங்கள் அதிகாரிகள் ஆணையத்தில் கூறியது சரிதான். ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை. 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி களில் ஒருவரான வீரபெருமாள் என்பவரை அழைத்து என்னை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
நான் வந்தபோது என்னிடம் பேசிய ஜெயலலிதா, இதுபோல தீர்ப்பு வந்துள்ள தாக கூறி, உடனடியாக சென்னைக்கு விரைந்து அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்யவும், அமைச்சர்களைக் கூட்டி அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் படியும் கூறினார். அப்போது நான் கண்கலங்கி அழுத நிலையில் இருந்தேன் அதைப்பார்த்ததும் ’பன்னீர் அழாதீர்கள், இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்’ என்று ஜெய லலிதா கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை. பெரும்பாலான மக்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதாக தெரியவந்ததால் விசாரணை ஆணையம் அமைக்க கோரினேன். தனிப்பட்ட முறையில் சசிகலாவின் மீது எப்போதும் எனக்கு மரியாதையும் அபிமானமும் உண்டு’ என்றார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்கு மூலத்தில் ”2016 டிசம்பர் 5-ம் தேதி இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவை நான் உள்ளிட்ட அமைச்சர்கள் 3 பேர் அவரை நேரில் பார்த்தோம். உயிர்காக்கும் கருவியாக இருக்கக்கூடிய எக்மோ கருவியை ஜெயலலிதாவின் உடலில் இருந்து அகற்றுவதற்கு முன் அவரை நேரில் பார்த்தேன். அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, ஜெயலலிதாவை சந்திக்காமல், பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் நினை வில்லை. அன்றைய தினம் ஜெயல லிதா இருதய துடிப்பு செயலிழந்த நிலையில், மீண்டும் இதய துடிப்பை தூண்டும் சி பி ஆர் (CPR) சிகிச்சை அளித்தது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், அன்று மாலை எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். அவர் இறப்பதற்கு முன்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேருடன் நான் அவரை நேரில் பார்த்தேன்.
இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு மூலம் அளித்தார். அவரிடம் இத்துடன் விசாரணை முடிந்தது.
