படம் வெள்ள குதிர
நடிப்பு: ஹரிஷ் ஓரி அர்த்தனாரி, அபிராமி போஸ், விஜயகுமார், ரெஜின், மெலடி டார்கஸ், சரண்யா
தயாரிப்பு:ஹரிஷ் ஒரி அர்த்தனாரி
இசை: பரத் ஆசிகவன்
ஒளிப்பதிவு-ராம்தேவ்
இயக்கம்,:ரண்ராஜ் செந்தில்குமார்
பிஆர்ஒ-சாவித்ரி, டைமண்ட் பாபு.
மலைப் பகுதியில் சாலை இல்லாத நிலையிலும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களை ஏமாற்றி, நிலத்தை அபகரித்து அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற ஊர் முக்கிய புள்ளி திட்டமிடுகிறார். இந்நிலையில் வெளியூரில் தங்கி இருந்த ஹரிஷ் ஓரி அர்த்தனாரி தனது குடும்பத்துடன் வந்து தங்குகிறார். ஆனாலும் ஹரிஷ் கள்ளத்தனம் கொண்டவராக இருக்கும் நிலையில் அவரது மனைவி அந்த ஊரில் நிலத்தை அபகரிக்கும் ஊர் பெரும்புள்ளியை எதிர்த்து போராட ஊர் மக்களை திரட்டுகிறார். இந்த எங்கு போய் முடிகிறது என்பது கிளைமாக்ஸ்.
வெள்ள குதிர என்ற டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது. இது ஏதோ அமானுஷ்யம் கலந்த கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அரங்கிற்கு சென்றால் ஒரு மலைப்பகுதியில் வாழும் மக்களின் அவல நிலையை சொல்லும் எதார்த்தமான கதையாக உருவாகி உள்ளத்தை நெகிழ வைக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி அர்த்தனாரி அசல் கிராமத்து மனிதராகவே மாறி இருக்கிறார். கள்ளத்தனம் செய்வது, மனைவிக்கு தெரியாமல் சாராயம் காய்ச்சி விற்பது என்று தனது குணத்தை வெளிப்படுத்தும்போது ஒரு சில நபர்களை கண் முன் நிறுத்துகிறார்.
தனது தவறுக்கு பரிகாரம் தேடிவிட்டு ஹரிஷ் மனம் திருந்த முயலும் நிலையில் எதிரிகள் அவரை தாக்கி துவம்சம் செய்யும்போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். கதாபாத்திரத்தில் இவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கும் ஹரிஷ் ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றவரா என்ற சந்தேகம் எழும்நிலையில் அவர் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர் என்பதை அறிந்ததும் அதான், இவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார் என்று சபாஷ் போட வைக்கிறார்.
ஹரிஷ் மனைவியாக. வரும் அபிராமி அந்த மலை கிராம மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருக்கிறார். ஊர் மக்களை ஏமாற்றம் பெரும்புள்ளி விஜயகுமாரின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்தும்போது சமூக போராளியாக கண்ணுக்கு தெரிகிறார்.
படத்தில் நடித்திருக்கும் மற்ற. பல நடிகர்கள் மேடை நாடகக் கலைஞர்கள் என்பதால் அவர்களின் நடிப்பும் எதார்த்தத்தை மீறவில்லை.
மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பாட்டியின் முணுமுணுப்பும் ,சோகமும், மரணமும் நெஞ்சுக்குள் ஒரு பாரத்தை ஏற்றி விடுகிறது.
மேலும் ரெஜின், மெலடி டார்கஸ், சரண்யா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வெள்ளகுதிர’ திரைப்படம் 62 சர்வதேச பரிந்துரைகளையும், சிறந்த நடிகருக்கான 26 விருதுகள், சிறந்த திரைப்படத்திற்கான 23 விருதுகள், சிறந்த தொழில்நுட்பவியலாளர்கள் ஆறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பட்ஜெட்டில் ஹரிஷ் ஒரி அர்த்தனாரி படத்தை தயாரித்திருந்தாலும் அதை ஒரு அர்த்தமுள்ள தயாரிப்பாக மாற்றி இருப்பதற்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் ஈடாகாது.
பரத் ஆசிகவன் இசையும், ராம்தேவ் ஒளிப்பதிவும் மலை கிராமத்தில் வாழும் மக்களின் இறுக்கமான மனநிலையை படம் பிடித்திருக்கிறது.
இது நிஜ கதை அல்ல கற்பனை கதைதான் என்று இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் சொன்னாலும் இப்படியும் பாதை இல்லாமல் வாழும் மக்களின் அவல நிலை இருப்பதை நினைவுக்கு கொண்டு வருகிறது
வெள்ள குதிர என்பது நம் முன்னோர்களின் ஆன்மா என்பதை கிளைமாக்சில் சூசகமாக குதிரை கணைப்பை வைத்து சித்தரித்திருப்பது சுவர் இல்லாத ஓவியம்.
வெள்ள குதிர -சொல்ல வேண்டிய வெல்ல வேண்டிய கதை.

Review By
K Jayachandhiran
Trending cinemas now.com
