கவிஞர். பொன். மனோபன் மன்னன், பாணன், கவித்ரன் ஆகிய புனைபெயர்களால் அறியப்பட்ட இவரது இயற்பெயர் ஜெப மனோபன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் விழுந்தயம்பலம் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தார். 15ஆம் வயது முதல் இவர் கவிதை எழுத தொடங்கியுள்ளார். தனது 18வது வயதில் மன்னன் என்ற புனைப் பெயரில் கண்ணீர் மேகங்கள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
2003ல் இளங்கலை தமிழ் இலக்கியம், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியில் முடித்தார். திரைப் பாடலாசிரியர் கனவினாலும் கவிஞர் வைரமுத்துவின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் இவர் பச்சையப்பன் கல்லூரி நோக்கி ஈர்க்கப்பட்டார். 2006ல் முதுகலை தமிழ் இலக்கியம் பச்சையப்பன் கல்லூரியிலும், 2007ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் மற்றும் 2017ல் முனைவர் பட்டம் இரண்டையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முடித்தார். இவரது கவிதைகள் சிற்றிதழ்களில் வெளி வந்துள்ளன.
அணையை உடைக்கும் நதிகள் என்பது இவரது இரண்டாவது கவிதை தொகுப்பாகும். இத் தொகுப்பை பாணன் என்னும் பெயரில் எழுதினார். கிழக்கு நட்சத்திரம் என்ற ஒரு நெடுங்கவிதை நூலையும், ஆகாயத்தை அடைகாக்கும் முட்டைகள் என்ற நான்காவது கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
பைரி திரைப்படத்தில் ஒரு பாடலையும், 5 வில்லிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். பைரி படத்தில் இவர் எழுதிய அந்தி வானம் அழகே என்ற பாடல் தற்காலச் சமூகச் சூழலில் அன்பின் மேன்மையை வலியுறுத்தும் விதமாக அமைந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளியீட்டிற்குப்பின் கவிஞர் மேலும் இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட ஆயத்தமாக உள்ளார்.
