படம்: யூ ஐ (UI)
நடிப்பு: உபேந்திரா, ரேஷ்மா நானியா மற்றும் பலர்
தயாரிப்பு: லகரி பிலிம்ஸ்
இசை: பி அஜ்னேஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: எச் சி வேணுகோபால
இயக்கம்: உபேந்திரா
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
மானபங்க படுத்தப்பட்ட தாய்க்கு பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி தன் தாய்க்கு யாரெல்லாம் கொடுமை செய்தார்களோ அவர்களை கல்கி பகவான் என்ற பெயரில் உருவெடுத்து கொடுமை செய்து துன்புறுத்தி பழிவாங்கும் கதை.
யூ ஐ என்று ஒரு படத்துக்கு டைட்டில் வைத்துவிட்டு என்ன கதை சொல்வது என்று தெரியாமல் உபேந்திரா ரொம்பவே குழம்பி இருக்கிறார் என்பது படம் தொடங்கிய அடுத்தடுத்த காட்சியிலேயே வெட்ட வெளிச்சமாகி விடுகிறது.
தொடக்கத்திலேயே திரையில் ஒரு சில வசனங்கள் காட்டப்படுகிறது முட்டாள்கள் இந்த படத்தை பார்க்க மாட்டார்கள் என்று வரும் வசனங்கள் படம் முடியும்போது முட்டாள்கள் கூட இந்த படத்தை பார்க்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கலாமோ என்று என்ன வைத்து விடுகிறது.
படத்தில் எந்த காட்சி எப்போது வருகிறது, என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் நகர்ந்து செல்கிறது.
திடீரென்று குதிரை மேல் சவாரி செய்து வரும் உபேந்திரா நான்தான் கல்கி பகவான் என்று சொல்லி அரண்மனையில் இருக்கும் முக்கியஸ்தரை உன்னை டெல்லி பிரதிநிதி ஆக்குகிறேன் என்று சொல்லி மஸ்கா அடித்து அவரை நடுரோட்டிற்கு கொண்டு வருவதற்கான பில்டப் என்று ஓரளவுக்கு தெரிகிறது.
அதேசமயம் ஊரில் உள்ள மக்களை கூட பஞ்ச பரதேசியாக்கி அவர்களை கஞ்சிக்கு வழி இல்லாமல். கோவணத்துடன் நிற்க வைப்பது எந்த சாமியும் செய்யாத கொடுமைதான் . ஆனால் அதை உபேந்திரா செய்திருக்கிறார். கல்கி பகவான் வரும்போது உலகம் அழியும் என்று புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதாக கூறுவார்கள் அதை சிறுவயதில் காதில் வாங்கியிருப்பார் போலிருக்கிறது அப்படியே அதை படமாக்கி கல்கி பகவானை ஒரு அழிக்கும் கடவுளாக காட்டி ஏதோ ஒரு நியாயத்தை சொல்ல முற்பட்டிருக்கிறார் உபேந்திரா. இவரின் இந்த கோபம் மக்கள் மீது இல்லை பான் இந்தியா படம் என்று சொல்லி ஏதேதோ கதைகளை கூறிக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் மீதும் தயாரிப்பாளர்கள் மீதும் தான் என்பதை கிளைமாக்ஸில உணர்த்தியிருக்கிறார்.
யாரையோ தாக்குவதற்கு இப்படி ஒரு படம் எடுத்து ரசிகர்களை ஐ சி யு வில் அனுமதிக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்திருப்பது மன்னிக்க முடியாத செயல். அதற்கு பரிகாரமாக உடனடியாக ஒரு நல்ல படத்தை உபேந்திரா தருவதுதான் அதற்கு பரிகாரமாக இருக்கும்.
பட காட்சிகள் ஒரு பக்கம் குழப்பிக் கொண்டிருக்க மறுபக்கம் தலையில் சம்மட்டியால் அடிப்பது போல் பி அஜ்னேஸ் லோக்நாத் இசை புரட்டி எடுக்கிறது.
எச் சி வேணுகோபால் படத்தை பளிரென ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மற்றபடி காட்சிகளையோ கதையோ மாற்ற முடியாது என்ற அளவில் அவரது கைகள் கட்டப்பட்டிருப்பது கண் கூடு.
யூ ஐ – பான் இந்தியா படங்களின் மீதான உபேந்திராவின் கோபம்.

