படம்: சாமானியன்
நடிப்பு: ராமராஜன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், கே எஸ் ரவிக்குமார், சரவணா சுப்பையா, லக்க்ஷா சரண், லியோ சிவகுமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சரவண சக்தி, கஜராஜ் மைம் கோபி, போஸ் வெங்கட்
தயாரிப்பு: வி மதியழகன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: சி.அருள் செல்வன்
இயக்கம்: ஆர் ராகேஷ்
பி ஆர் ஓ: ஏ ஜான
சென்னையில் பிரபல வங்கிக்குள் நுழையும் சங்கர நாராயணன் (ராமராஜன்) கையில் துப்பாக்கி, சூட்கேசில் rdx வெடிகுண்டு வைத்துக்கொண்டு வங்கி மேனேஜரையும், உதவி மேனேஜரையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து மிரட்டுகிறார். அதேசமயம் சங்கர நாராயணனின் நண்பர்கள் இருவர் மேனேஜர் வீட்டிற்கும், உதவி மேனேஜர் வீட்டிற்கும் சென்று அங்குள்ள பெண்களை துப்பாக்கி முனையில் நிறுத்துகின்றனர். வங்கியில் கொள்ளையடிக்க வந்திருப்பார் களோ என்று எண்ணும்.நிலையில் கதை வேறு விதமாக மாறுகிறது. அவர்கள் எதற்காக வங்கி அதிகாரிகளை துப்பாக்கி முனையில் நிறுத்தினார்கள. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதுதான் சாமானியன் படத்தின் கதை
கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் கிராமத்து நாயகன், மக்கள் நாயகன் என்று பட்டப் பெயர்களை கொண்ட ராமராஜன். கரகாட்டக் காரனில் பார்த்த அதே ராமராஜனா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வருடங்கள் ஓடிவிட்டது அவரது உருவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது, சினிமாவிலும் புதிய கதைகள் வரத் தொடங்கி விட்டன. தனது தோற்றத்திற்கும் தற்போதைய சினிமா பாணிக்கும் ஏற்ற கதையாக தேர்வு செய்து ராமராஜன் நடித்திருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளில் நின்ற இடத்திலேயே எதிரிகளை ராமராஜன் பந்தாடுவதில் வேகம் தெரிகிறது. அதே சமயம் அவரது நடையில் கொஞ்சம் வேகமும் விறுவிறுப்பும் காட்டி இருந்தால் உண்மையிலேயே புதிய ராமராஜனை பார்த்திருக்க முடியும். ஆனாலும் தெளிவான வசன உச்சரிப்பிலும் அழுத்தமான நடிப்பிலும் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறார்.
ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் இருவரும் சிறிய பாத்திரங்கள் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் புதுமுக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார் லியோ சிவகுமார், அவருக்கு ஜோடியாக நக்ஷா சரண் நடித்திருக்கிறார். இருவரும் பாத்திரத்தை உணர்ந்து ஓவர் ஆக்டிங் இல்லாமல் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு இறுக்கமான முடிச்சு போட்டு விடுகிறார்கள்.
வி மதியழகன் படத்தை தயாரித்து இருக்கிறார்.
ராமராஜன் படம் என்றாலே இசைஞானி இளையராஜா இசை என்ற ஃபார்முலா இந்த படத்திகும் இணைந்திருக்கிறது. ஆனால் கதைக்களம் தான் ஆக்சன் தளத்துக்கு மாறி இருக்கிறது. ஆனாலும் ராமராஜனுக்காக இரண்டு இனிமையான பாடல்களை படத்தில் இணைத்து இருக்கிறார் இளையராஜா. ஆங்காங்கே செண்பகமே செண்பகமே வரிகள் தாளமிட வைக்கிறது.
வி கார்த்திக் குமார் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இக்கதையை எழுதி இருப்பதாக அவரே சமீபத்தில் தகவல் வெளியிட்டார். வங்கியில் கடன் வாங்கி சிக்கிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானவர்களின் சோக வாழ்வை இக்கதை செவிட்டில் அறைந்தது போல் கூறியிருக்கிறது.
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ஆர் ராகேஷ் சாமானியன் படத்தை எந்த இடத்திலும் சொதப்பி விடாமல் இயக்கியிருக்கிறார். இது சொல்லப்பட வேண்டிய கதை, அழுத்தமாக கூறி இருக்கிறார் இயக்குனர்.
ராமராஜனுக்கு என்ன வேடம் கொடுத்தால் அவரது ரீஎன்ட்ரிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இயக்குனர் தீர்மானத்திருப்பதும், அதை ராமராஜனும் உணர்ந்து ஏற்று நடித்திருப்பது புத்திசாலித் தனம்.
சாமானியன்- சமூக பொறுப்பானவன்.

..
