நடிகர் ரஞ்சித் கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘இறுதி முயற்சி’ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் இயக்குனர் பேரரசு பங்கேற்று படத்தின் இசையை வெளியிட்டனர்.
வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ படத்தில் ரஞ்சித், மேகாலீ ஜோடியாக நடிக்க இவர்களுடன் இணைந்து விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கிறார்.
வரும் அக்டோபர் மாதம்10 தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட இயக்குநர் வெங்கட் ஜனா இறுதி முயற்சி பற்றி பேசுகையில், ” நான்காண்டுகளுக்கு முன்னர் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. அதனை பார்த்துவிட்டு என்னால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. தற்கொலைக்கு முன்னதான அவருடைய உளவியலை பற்றியும், பதற்றத்தை பற்றியும் சிந்தித்தேன். எனக்குள் பல வினாக்கள் எழுந்தது. அத்துடன் அந்த தற்கொலை செய்து கொண்ட குடும்ப தலைவரை மக்கள் மனதில் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும். அதற்காக ஒரு படைப்பினை உருவாக்க வேண்டும். அத்துடன் அந்தப் படைப்பின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதையும் சொல்லிட வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை உருவாக்கினேன். அனைவரும் இந்த படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது:
இறுதி முயற்சி பட ட்ரெய்லரை பார்த்தபோது மனதை தொடுவதாக இருந்தது. இப்படத்தில் நடித்திருக்கும் ரஞ்சித். ஆழமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை உணர முடிந்தது.
டெக்ஸ்டைல் அதிபர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் ஜனா. இந்த திரைப்படம் சமுதாயத்துக்கு ஒரு நல்ல படிப்பினை தரும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ரஞ்சித் ஹீரோவாக நடிக்கிறார் என்றவுடன் கத்தி, உருட்டு கட்டை எடுத்துக் கொண்டு வருவார் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இதில் அவர் முழுக்க முழுக்க தனது முழுமையான நடிப்பை கொண்டு வந்து நிறுத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கதாநாயகியாக நடித்திருக்கும் மேகாலீ கதாபாத்திரத்தை நன்கு புரிந்து நடித்திருப்பது தெரிகிறது.
பாடல்களும் மனதை தொடுவதாக இருந்தது. இப்படம் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நடிகர் ரஞ்சித் பேசும்போது,”
முதலில் இந்த படத்தில் நடிக்க என்னை இயக்குனர் அணுகி கேட்டபோது முடியாது என்று கூறிவிட்டேன். பின்னர் அவர் ஒரு புத்தகத்தை கொடுத்தார். அதை முழுமையாக படித்து உடனடியாக அவருக்கு போன் செய்து பேசினேன். என்னவானாலும் சரி நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினேன்.
நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் முதலில் அந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரின் பின்புலத்தை நான் பார்க்கிறேன். அந்த படத்தை எடுத்து முடிந்த பிறகும் அவரால் அந்த இழப்பையோ அல்லது மாற்றத்தையோ தாங்கிக்கொள்ளும் வலிமை உள்ளவரா என்று தெரிந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.
இறுதி முயற்சி படத்தில் நடிக்கிறேன் என்று கூறிய போது படத்திற்கு ஏன் இப்படி ஒரு டைட்டில் வைத்தீர்கள், பாசிட்டிவான டைட்டில் வைக்க வேண்டியதுதானே என்று பலர் கூறினார்கள். ஆனால் இந்த கதைக்கு இந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதை உணர முடித்தது. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்களை கவர்ந்து அது வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வரவேற்பை இறுதி முயற்சி படமும் பெரும் என்று எண்ணுகிறேன்.
நடிகை மேகாலீ பேசும்போது,”இப்படத்தில் எனக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அருமையான வாய்ப்பு கிடைத்தது. உடன் நடித்த ரஞ்சித் நல்ல கோ ஆர்டிஸ்ட் ஆக இருந்தார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது,” இறுதி முயற்சி நெகட்டிவ் டைட்டில் என்கிறார்கள். ஆனால் நெகட்டிவ் டைட்டில் வைத்த படங்கள் வெற்றிகரமாகவே ஓடி இருக்கிறது. பாக்யராஜின் ஒரு கை ஓசை, தூறல் நின்னு போச்சு என்று நெகட்டிவ் டைட்டில் வைத்தார் ஆனாலும் படம் வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன் என்ற டைட்டிலில் படம் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் கடைசி விவசாயி படம் தேசிய விருது பெற்றது. அந்த வரிசையில் இறுதி முயற்சி என்பது நெகட்டிவ் டைட்டிலாக இருந்தாலும் ஒரு உணர்வை வெளிப்படுத்தும் படமாக இருக்கிறது. முயற்சி என்பது மீண்டும் முயன்றுக்கொண்டே இருப்பது என்று அர்த்தம் அது எதிர்மறை டைட்டில் கிடையாது. முயற்சி என்பது நம்பிக்கை. சமுதாயத்துக்கு இது ஒரு நம்பிக்கை தரும் படமாக இருக்கும்.
இப்படத்தில் ரஞ்சித் நாயகனாக நடித்திருக்கிறார். ரஞ்சித் நடித்த நிறைய படங்கள் நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் அவரை முழுமையான நடிகராக நான் பார்க்கிறேன். வசனம் பேசி நடிப்பது, சோகமாக நடிப்பது போன்ற நடிப்பை நடித்து விடலாம். ஆனால் வசனமே பேசாமல் முகபாவனை காட்டி எதிரில் நடிப்பவருக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பை யார் வெளிப்படுத்துகிறாரோ அவரே சிறந்த நடிகர். அந்த வகையில் இந்த படத்தில் ரஞ்சித் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது முன்னோட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது. இறுதி முயற்சி மக்களுக்கான படம். இன்றைய தினம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்கின்றனர். கோயம்புத்தூரில் வாழ்ந்த ரவிச்சந்திரன் என்கின்ற தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது யாரும் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து விடக்கூடாது என்ற நம்பிக்கை பிறந்து எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வரும் என்று நம்புகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார்.
