தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவி, “சிறை” பட புதுமுக ஹீரோ அக்ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு சங்கத் தலைவி கவிதா தலைமை தாங்கினார், செயலாளர் கோடங்கி ஆபிரகாம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் பி சி ஸ்ரீராம், வைட் ஆங்கில் ரவி ஆகியோருக்கு சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் பி சி ஸ்ரீராம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிறுவயதில் நான் சரியாக படிக்கவில்லை, பின்னர் திரைப்பட கல்லூரியில் கேமரா மேன் படிப்பில் சேர்ந்தேன். அங்கும் நான் சரியாக தேர்ச்சி பெறவில்லை. பரிட்சையில் கூட நீ பாஸ் ஆகவில்லையே என்று என் தாயார் வருத்தப்பட்டார்.
என்னை பொறுத்தவரை எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என் தாய், தந்தை தான் என் கடவுள்.
சினிமாவில் நான் பெரிதாக சாதித்து விட்டேன் என்று எண்ணவில்லை. இன்னும் நிறைய பணிகள் நான் செய்ய வேண்டி இருக்கிறது. திரைப்படம் இயக்கும் பணி கூட எனக்கு இருக்கிறது. அந்தப் பணியை நான் விரைந்து செய்து முடிப்பேன். என்னிடம் பணியாற்றிய உதவியாளர்கள் அனைவருமே திறமைசாலிகள். குறிப்பாக ஜீவா, கே வி ஆனந்த் இருவரையும் என்னால் மறக்கவே முடியாது.
என் வாழ்வில் நான் நிறைய தோல்விகளை தான் கண்டேன். ஆனால் அந்த தோல்விகள்தான் என்னை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. தோல்வி என்னுடைய தோழன்.
இவ்வாறு பிசி ஸ்ரீராம் கூறினார்.
முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
