கொரோனா இரண்டாம் அலை மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக கார், ஆட்டோ,வேன்,டெம்போ ஓட்டுனர்கள் எந்த வேலையும் இன்றி கடன் சுமையால் சிரமப்படுகின்றனர். அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள 125 டிரைவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து அரிசி பை, மளிகை பொருட்கள், சத்து மாவு, கபசுர குடிநீர் ஆகியவற்றை வேல்ஸ் பவன் வளாகத்தில் வைத்து வழங்கபட்டது.
கடன் தள்ளுப்படி செய்யுங்கள்!அரசுக்கு வேண்டுகோள்!
இந்த நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியபோது ..
தமிழக அரசும் அதிகாரிகளும் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.எங்களை போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தந்து களப்பணியாற்ற உற்சாகமளித்தமைக்கு நன்றி! இன்றைய சூழலில் ஓவ்வொருவருக்கும் கொரோனா மீது மிகுந்த பயம் உள்ளது. தன்னம்பிக்கையோடு போராடினால் கொரோனாவை வெல்லலாம். கொரோனா பயத்தால் ஒரு குடும்பம் தற்கொலை செய்தது வேதனையளிக்கிறது. இந்த பயத்தை போக்கி தன்னம்பிக்கை ஊட்ட அரசும், அதிகாரிகளும் முன் வர வேண்டும். கொரோனா பயத்தால் ஒரு உயிர் கூட போக கூடாது. அதே போல் கடன் தொல்லையாலோ, பசியாலோ ,உடைந்து போய் எந்த உயிரும் போக கூடாது. அதற்கு அரசு மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூகமும் களம் இறங்கி அவர்களை காப்பாற்ற வேண்டும். செல்வந்தர்கள் இந்த சூழலில் ஏழைகளுக்காக இரக்கப்பட்டு உதவி செய்ய வேண்டும். உதவி செய்வதற்கு இப்படி ஒரு பொன்னான காலம் இனி யாருக்கும் கிடைக்காது. எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் இவர்களிடம் வண்டிகளுக்கான கடன்களையும், வட்டியையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்! கலப்பை மக்கள் இயக்கத்தோடு லயோலா கல்லூரி நிர்வாகமும் இணைந்து உதவி செய்ய வந்தமைக்கு நன்றிகள்!
லயோலா கல்லூரி சேர்மன் நிக்கோலாஸ் பேசும் போது கலப்பையோடு இணைந்து உதவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக பிரச்சனை எதுவாக இருந்தாலும் குறிப்பாக மாணவ சமுதாயத்திற்காக எப்பேர்ப்பட்ட உதவியாக இருந்தாலும் செய்ய காத்திருக்கிறோம்.வீட்டிற்குள் முடங்கி இருப்பவர்கள் வீட்டு முற்றத்திலோ , மொட்டை மாடியிலோ ,தோட்டத்திலோ தனித்திருந்து காற்றை சுவாசியுங்கள். அது உங்கள் உடலை வளப்படுத்தும். தம்பி பி.டி.செல்வகுமார் காலமறிந்து உதவி வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் லயோலா கல்லூரி சேர்மன் நிக்கோலாஸ், லயோலா அலுவலக மேலாளர் வினோத், பேராசிரியை அமுதா, கலப்பை சட்ட ஆலோசகர் பால கிருஷ்ணன, இளைஞரணி தலைவர் கார்த்தீபராஜா கலந்து கொண்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு முக கவசம் அணிந்து இந்நிகழ்வு நடைபெற்றது.