படம்: ஐந்தாம் வேதம் ( வெப் சீரிஸ்)(8 எபிசோட்)
நடிப்பு: சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விஜய் ராஜகோபால், ஒய் ஜி மகேந்திரன்., கிருஷ்ணா குரூப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன்
தயாரிப்பு: அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன்
இசை: ரேவா
ஒளிப்பதிவு: சீனிவாசன் தேவராஜன்
இயக்கம்: நாகா
வெளியீடு: ZEE5 OTT தளம்
பிஆர்ஓ: சதீஷ் (AIM)
ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ் விமர்சனம் பார்ப்பதற்கு முன்பாக ஒரு சிறு குறிப்பு இந்த வெப் சீரிசை இயக்கிய நாகா டிவியில் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகி பிரபலமான மர்மதேசம் என்ற சீரியலை இயக்கி மறக்க முடியாத பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் வேதம் கதை:
பிரம்மா படைத்தது ரிக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம் மற்றும் அதர்வவேதம் என்ற நான்கு வேதங்களாகும். இது படித்த விஷயம். ஆனால் நான்கு வேதத்தை கடந்து ஐந்தாம் வேதம் ஒன்று இருக்கிறது என்பதை கூறும் படம் தான் அதாவது வெப் சீரிஸ்தான் ஐந்தாம் வேதம்.
பிரம்மாவிற்கு மொத்தம் ஐந்து தலைகள் அதில் ஒரு தலையை கோபத்தில் சிவன் கொய்ததாக புராணம் கூறுகிறது. கொய்யப்பட்ட பிரம்மனின் ஐந்தாவது தலை அய்யாங்காரபுரத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டு இருப்பதாக ஐதீகம் கூறுகிறது. பிரம்மாவின் நான்கு தலைகள் நான்கு வேதங்களை குறிக்கிறது. கொய்யப்பட்ட ஐந்தாவது தலை தான் ஐந்தாம் வேதம் என இந்த வெப் சீரிசின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சிவன் கோயிலில் மறைந்திருக்கும் அந்த பிரம்மாவின் தலையை அதாவது ஐந்தாம் வேதத்தை கண்டுபிடித்து அபகரிக்க ஒரு சதி நடக்கிறது. இதற்கிடையில்j பரம்பரையாக சிவன் கோயிலில் பூஜை செய்யும் பூஜாரி குடும்பத்தில் கிடைக்கும் ஒரு மர்ம பெட்டி மூலம் ஐந்தாம் வேதம் வெளிப்படும் என்ற தகவலும் வெளியாகிறது. ஐந்தாம் வேதம் வெளிப்பட்டதா?, அந்த வேதத்தில் புதைந்திருக்கும் ரகசியம் என்ன?, அதை அபகரிக்கும் சதி என்னவெல்லாம் நடக்கிறது? என்ற மர்மமான பல விஷயங்களை உள்ளடக்கிய அமானுஷ்ய தொடராக ஆன்மீக டச் உடன் ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது.

தீபாவளி விருந்தாக ZEE5 ஓ டி டி தளத்தில் ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ் வெளியாகிறது. எல்லோரும் பார்த்து ரசிக்கும் படியாக 8 எபிசோடுகளையும் இயக்கி இருக்கிறார் நாகா.
எட்டு எபிசோட் கதைகளையும் சொல்வதென்றால் விடிந்துவிடும். அதனால் ஒரு சில காட்சிகளை மட்டும் படத்திலிருந்து காணலாம்.
பிரம்மா தலையை கொய்த சிவன் கோயில் ஒன்று அற்புதமாக இப்படத்தில் காட்டப்படுகிறது. திரும்பத் திரும்ப காட்டினாலும் அந்த கோயிலின் முகப்பும் அழகும் தொன்மையும் பழமையும் மனதுக்குள் ஊடுருவிச் சென்று பக்தி பரவசத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
ஐந்தாம் வேதத்தை கண்டறியும் மர்ம பெட்டியை வந்தடையும் கடைசி தலைமுறையாக வருகிறது ஒய் ஜி மகேந்திரன் குடும்பம்.
மர்மப் பெட்டியை மந்திரம் சொல்லி திறக்கும்போது மந்திரம் சொல்லும் கடைசி வாரிசின் தந்தை இறந்து போவார் என்ற ஒரு கருத்தும் நிலவுவதால் ஒய் ஜி மகேந்திரன் மகன் தனக்கு கிடைக்கும் மர்ம பெட்டியை வாங்க மறுக்கிறார். அந்த மர்மபெட்டியில் என்ன இருக்கிறது என்பது இன்னொரு ரகசியம்.
கடவுள் மீது நம்பிக்கை இல்லாத சாய் தன்ஷிகாவிடம்தான் அந்த மர்ம பெடடி கொடுத்து அனுப்பப்படுகிறது. அதை அவர் கொண்டு வந்து கோவிலில் ஒப்படைக்கும்போது அதை பூஜாரி வாங்க மறுப்பதும், “வாங்கினால் வாங்கு வாங்காவிட்டால் போ” என்று கூறி அந்த பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு தன்ஷிகா வெளியேறியதும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
பாடகி ஆக வேண்டும் என்ற கனவில் அதற்கான ஆடிஷனுக்கு செல்லவிருக்கும் தன்ஷிகா சிவன் கோவில் இருக்கும் ஊருக்கு வந்த பிறகு அந்த ஊரை விட்டு அவர் வெளியேற முடியாமல் தவிப்பதும் கஷ்டப்பட்டு மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டு தப்பி விடலாம் என்று செல்லும்போது மீண்டும் மீண்டும் அந்த மோட்டார் சைக்கிள் திரும்ப ஊருக்குள்ளேயே வருவது என காட்சிகள் சுவாரஸ்யத்தை தொடர்கதை ஆக்குகிறது.
படத்தில் தேவதர்ஷினி வழக்கறிஞராக கொஞ்சம் வில்லித்தனத்துடன் நடித்திருக்கிறார். வில்லி என்றால் தம் அடிப்பார்களோ?! இதில் தேவதர்ஷினி புகைப்பிடித்து நடித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
ஐந்தாம் வேதம் ஒவ்வொரு எபிசோடும் முடியும்போது அதில் ஒரு அவிழ்க்க முடியாத முடிச்சை இயக்குனர் நாகா போட்டிருப்பது மொத்த எபிசோடையும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.
இவ்வளவு தேடியும் கடைசியில் ஐந்தாம் வேதம் கிடைக்கப்போவ தில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது அதற்கு மாறாக 5ஆம் வேதம் கிடைக்கிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பது இன்னொரு மலைப்பன விஷயம். படத்தில் பல்வேறு அமானுஷ்யங்கள் இடம்பெறு கிறது. ஆனால் எதுவும் யாரையும் பயமுறுத்தும்படி இல்லாதது குழந்தைகளையும் இந்த வெப்சீரிசை ஆர்வமாக பார்க்கத் தூண்டும்.
எட்டு எபிசோடுகளுடன் ஐந்தாம் வேதம் முடிந்துவிடுமா என்று பார்த்தால் அது இன்னும் இரண்டாவது சீசன், மூன்றாவது சீசன் என்று தொடரும்படியாக அமைத்து அதற்கான ஆர்வத்தையும் தூண்டி இருப்பது இயக்குனர் நாகாவின் புத்திசாலித்தனம்.
அபிராமி ராமநாதன், நல்லம்மை. ராமநாதன் ஐந்தாம் வேதம் வெப் சீரிசை தயாரித்திருக்கின்றனர்
:ரேவா இசை பக்தி பரபரப்புடன் ஒலிப்பதால் கதையோடு ஒட்டிச் செல்கிறது.
ஒளிப்பதிவாளர் சீனிவாசன் தேவராஜன் அருமையாக 8 எபிசோடுகளையும் படமாக்கி அதற்கு ஒரு புராண கால தன்மையை கொடுத்திருப்பது அழகோ அழகு.
ஐந்தாம் வேதம் – ZEE5 ல் தீபாவளிக்கு ஒரு மர்ம தொடர் கொண்டாட்டம்.

