Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்..

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் மண்ணின் மணம் வீசும் கதைக்களத்தை கையாள்கிறார்

இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை” விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி (இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்) உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு துவக்க விழாவில் ‘மஞ்சணத்தி’ படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பாக இப்படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா விழாவில் குத்துவிளக்கேற்றி படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

இப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்
கூறியதாவது..,

“என்னுடைய திரைப்படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியதில்லை. ஆனால் இந்தப் படத்தை அப்படித்தான் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் இளையராஜா சார் இருப்பது என்னுடைய வாழ்நாள் சாதனை. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காலங்கள் உண்டு. இன்று அவர் என்னுடைய திரைப்படத்திற்கு பணியாற்றுகிறார் என்பது என் வாழ்நாளில் நான் சாதித்த மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன். என் மனைவி திவ்யா செல்வராஜுக்கும் இளையராஜா சாரை நேரில் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இளையராஜா பணியாற்றுவது எங்களால் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

நான் என் உழைப்பு, வாசிப்பு, அரசியல் என அனைத்திலும் கர்வமாக இருந்திருக்கிறேன். ஆனால், எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து, ‘உனக்காகத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன், வா’ என்று இளையராஜா சார் அழைத்த அந்த நிமிடத்தில், நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்” என்றார். பல தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து பணியாற்றி வரும் அவரது உழைப்பும், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தக்கூடிய எங்கள் ராஜாவின் கர்வமும், திமிரும் என்றுமே அழகானது, உயர்வானது, மகத்துவமானது.

 

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக இருக்கும். திரைக்கதை எழுதும்போது நடிகர்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள் என பல விஷயங்களை யோசிப்பேன். ஆனால் இந்தப் படத்தை எழுதும்போது, ‘இந்த இடத்தில் ராஜா சார் எப்படி இசையமைப்பார்?’ என்றுதான் அதிகம் யோசித்தேன். இந்தப் படம் திரைக்கு வரும் நாள் என் வாழ்நாளின் முக்கியமான நாளாக இருக்கும். கதிர் இந்தப் படத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. நான் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பதற்கும் அவரும் ஒரு முக்கிய காரணம். கதையை கூறுவதற்கு முன்பே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்ட நடிகர்களுக்கும் படத்தில் சிறப்பான பங்கு உள்ளது. படம் பார்க்கும்போது அது அனைவருக்கும் தெரியும். இந்தத் திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் தழுவியதாக இருக்கும். அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.”

படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியதாவது..,

“நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய வீடு வந்துவிடும். நானும் இங்குதான் பிறந்தவன். காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.

“உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”

ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம்.

அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் இசையமைப்பது என் வேலை. கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன். என் வேலை என்னவோ, அதுதான் சரஸ்வதி எனக்குக் கொடுத்தது. அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் என் இசையை கொண்டாடக்கூடிய ஒருவர்.

இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இதில் பங்குபெற்ற அனைவரும் நல்ல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

படத்திற்கு எழில் அரசு K ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும், சாண்டி நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார். சுரேன்.G, அழகியகூத்தன்.S ஆகியோர் ஒலி வடிவமைப்பையும், ரஞ்சித் அம்பாடி மேக்கப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

VFX பணிகளை ஹரிஹரசுதன் R கவனிக்கிறார். பப்ளிசிட்டி டிசைனை கபிலன் மேற்கொள்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகம் பணியாற்றுகிறார்.

திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் மற்றும் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ் லால்வானி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் எண்டஎடெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி..

Jai Chandran

நடிகர்கள்‘சூரி, ஆரி வெளியிடும் சுயாதீன பாடல் காணொளி!

Jai Chandran

உஸ்பெகிஸ்தானில் திரிஷா “ராங்கி”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend