படம்: பூகம்பம்
நடிப்பு: இஷாக் உசைனி
தில்சானா, ஹேமா, ரிஷத், என்.எம். இலியாஸ், மும்பை மல்கோத்ரா
தயாரிப்பு: ஐ இன்டர்நேஷனல்
இசை: சதாசிவ ஜெயராமன்
தயாள் ஓஷோ தேவராஜ்
இயக்கம்: இஷாக் உசைனி
பிஆர்ஓ: விஜய முரளி
கராத்தே மற்றும் வாள் வீச்சில் சர்வதேச அளவில் பட்டம் பெற்றவர் பிரபா (இஷாக் உசைனி). இவர் காதலியை காணவும், மேற்படிப்பு படிக்கவும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். இங்குள்ள அரசியல்வாதி பொற்கை பாண்டியன் தில்லுமுல்லு செய்து தேர்தலில் ஜெயிக்க முயற்சிக்கிறார். இதையறிந்த பிரபா , அரசியல்வாதி பொற்கை பாண்டியனின் சூழ்ச்சியை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.
மறைந்த கராத்தே மாஸ்டர் ஷைன் உசேனியின் தம்பி இஷாக் உசைனி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
ஒரு அரசியல் மெசேஜை மக்களிடம் சொல்லி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இஷாக் உசைனி போட்டுக் கொண்ட வேஷம்தான் இந்த நடிகர், இயக்குனர் வேஷம்..
கல்லூரி மாணவர் பிரபா , அரசியல்வாதி பொற்கை பாண்டியன் என இரு மாறுபட்ட வேடத்தில் இஷாக் உசைனி நடித்திருக்கிறார்.
இவர் உண்மையிலேயே கராத்தே மற்றும் வாள் வீச்சில் சர்வதேச பட்டம் வென்றவர் என்பதால் அவரது ஒவ்வொரு ஆக்ஷனும் முறைப்படியான ஆக்ஷன் காட்சிகளாக அமைந்திருக்கிறது. என்னதான் சண்டை பயிற்சியில் நிபுணராக இருந்தாலும் ஒரே காட்சியில் நம்மூர் ஹீரோக்கள் அடிப்பது போல் ஒரே அடியில் 50 பேரை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளில் நடிக்காமல் நான்கு ரவுடிகள் வந்தாலும் அவர்களை தனித்தனியாக பிரித்து சாய்க்கும் காட்சிகள் நம்பும்படியான சண்டைக் காட்சிகளாக இருக்கிறது.
பொற்கை பாண்டியன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் புருவத்தையும் மீசையையும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு விதமாக வைத்திருப்பது மேக்கப் மேன் செய்த கோளாறா அல்லது வேண்டுமென்று அதுபோன்று ஏடாகூடமாக இஷாக் உசைனி வைத்துக் கொண்டாரா என்பது புரியவில்லை..
கல்லூரியில் ஆயிரம் மாணவர்களை அடைத்து வைத்திருப்பதாக வசனத்துக்கு வசனம் சொல்கிறார்கள் ஆனால் காட்சியில் 10 பேர் தான் இருக்கிறார்கள், ஒரு வழியாக மற்ற மாணவர்களை தனி அறையில் அடைத்து வைத்து விட்டதாக ஒரு வசனம் அமைத்து சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்கள்.
தில்சானா, ஹேமா என்ற இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரிஷத்
என்.எம். இலியாஸ்
மும்பை மல்கோத்ரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கிட்டதட்ட எல்லோருமே புது முகங்கள் தெரிந்த முகம் என்று யாருமே இல்லாதது பெரிய குறை..
வடநாட்டில் வேறு ஆளுக்கு ஓட்டு போடும் கிராமம் என்று தெரிந்தால் அந்த கிராம மக்களை தேர்தல் நேரத்தில் வாக்களிக்க வெளியே விடாமல் ஏதாவது சூழ்ச்சி செய்து ஊருக்குள்ளேயே அடைத்து விடுவார்கள் அந்த ஒரு சூழ்ச்சியை மறைமுகமாக கல்லூரியில் மாணவர்கள் ஓட்டு போட விடாமல் அடைத்து வைத்திருக்கும் காட்சியில் சொல்லியிருப்பதாக இயக்குனர் இஷாக் உசைனி பேட்டியில் தெரிவித்தார். இதை அவர் படத்தில் வசனமாக வைத்திருந்தால், என்னவிதமான அரசியல் பேச வந்தார் என்பது ஓரளவுக்கு புரிந்திருக்கும்.
பூகம்பம் படம் வெற்றி பெற்றால் அடுத்து கோட்டைக்குள் பூகம்பம் என்ற படத்தை இயக்கப் போவதாக இஷா உசைனி கூறியிருக்கிறார்.
தீபாவளிக்கு திரைக்கு வரும் பூகம்பம் படத்திற்கு சதாசிவ ஜெயராமன் இசையமைத்திருக்கிறார்.
தயாள் ஓஷோ தேவராஜ் ஒளிப்பதிவு சுமார் ரகம். தொடக்க காட்சிகளில் வரும் வெளிநாடு காட்சிகள் கண்ணுக்கு இதம்.
பூகம்பம் – அதிர்வு பெரிதாக இல்லை.
Review By
K Jayachandhiran
Trendingcinemasnow.com
